சென்னை: “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது” என்று கூறியுள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ‘எனினும், இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள், இன்னமும்…’ என்று தலைப்பிட்டு வீடியோ பதிவு ஒன்றில் விவரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியது: “2024-ம் ஆண்டு டிச.23-ம் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு மிக மோசமான, கோரமான பாலியல் வன்கொடுமை நடந்தது. அந்தச் சம்பவம் நடந்த பிறகு, 25-ம் தேதி ஒரு குற்றவாளியை கைது செய்தனர். இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில், ஜனவரி மாத இறுதியில் நான் சில விஷயங்களை, சிடிஆர் (Call details record) அடிப்படையில் உங்கள் முன்பு தெரிவிப்பதாக கூறியிருந்தேன். அதைப் பேச வேண்டிய நேரம் இன்று வந்துவிட்டது.
டிச.25-ம் தேதி கைது செய்யப்பட்ட பிறகு, எஃப்ஐஆர் கசியவிடப்பட்டது. 27-ம் தேதி நான் ஓர் அறப்போராட்டத்தை முன்னெடுத்தேன். அதன்பிறகு அண்ணா பல்கலை. பாதுகாப்பை பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்தனர். சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து இந்த வழக்கை கண்காணிக்க ஆரம்பித்தனர். 5 மாதங்கள் கழித்து தீர்ப்பு வந்திருக்கிறது. முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய ஒரே குற்றவாளியான ஞானசேகரனுக்கு 30 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அன்றைக்கு கேட்ட அதே கேள்வியை இன்றும் கேட்கிறோம்.
துரிதமாக விசாரணை நடத்தி, ஞானசேகரன் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 30 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் அனைவருக்குமே சந்தோஷம்தான். இருந்தாலும் பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணீர்த் துளிக்கு நியாயம் கிடைக்குமா என்றால், எப்போதுமே கிடைக்காது. இருப்பினும், அரசு அந்த வேலையை செய்திருக்கிறது. ஆனால், அரசு அந்த வேலையை முழுமையாக செய்திருக்கிறதா என்பது நம்முடைய கேள்வி.
டிச.23-ம் தேதி நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் அடிப்படையில் டிச.24-ம் தேதி கோட்டூர்புரம் போலீஸார் கைது செய்கின்றனர். பின்னர் அவரை வெளியே விட்டுவிடுகின்றனர். டிச.25-ம் தேதி மாலை மீண்டும் அவரை கைது செய்தார்கள். 24-ம் தேதியன்று ஏன் அவரை வெளியே விட்டார்கள்? இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர்? எதற்காக திமுகவில் சில தலைவர்களுக்கு பதற்றம்? ஆதாரங்களை எங்கெல்லாம் அழித்திருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது?
ஞானசேகரனைப் பொறுத்தவரை ‘கிராவிட்டி’ பிரியாணி என்ற ஒரு கடையை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த அன்று அவரது கையில் இருந்த அலைப்பேசி எண் இது (நம்பரைக் குறிப்பிடுகிறார்). இதுதான் ஞானசேகரன் பயன்படுத்திய மொபைல் எண். ஆனால், டிச.23-ம் தேதி சம்பவம் நடந்தபோது ஞானசேகரன் மொபைல் எண் இரவு 8.52 வரை ஃபிளைட் மோடில் இருந்ததாக அரசு வழக்கறிஞர் கூறியிருக்கிறார். அது உண்மைதான். சிடிஆர் அறிக்கையிலும் அப்படித்தான் உள்ளது.
இரவு 8.52-க்குப் பிறகு, ஃபிளைட் மோடில் இருந்து வெளியே வந்த ஞானசேகரனின் போனில் இருந்து முதல் கால் யாருக்கு சென்றது? ஒரு காவல்துறை அதிகாரிக்குத்தான் ஞானசேகரன் முதல் போன் கால் செய்கிறார். பாலியல் வன்கொடுமை முடிந்து வெளியே சென்றாரா, இல்லை அந்த இடத்தில் இருந்தே போன் செய்தாரா என்று தெரியவில்லை. ஆனால், அந்தச் சம்பவம் நிகழ்ந்த பிறகு முதல் காலே, ஒரு காவல் துறை அதிகாரிக்குத்தான் செய்கிறார். காவல் துறையின் மீது வைத்திருக்கும் மரியாதையின் காரணமாக, அந்த காவல் துறை அதிகாரியின் பெயர், மொபைல் எண் போன்றவற்றை இன்று நான் வெளியிடவில்லை.
48 மணி நேரத்தில், இதற்கு அரசு என்ன பதிலளிக்கிறது என்பதை பார்த்துவிட்டு, அந்த விவரங்களை நான் வெளியிடுகிறேன். ஞானசேகரன் 8.55 மணிக்கு காவல் துறை அதிகாரிக்கு முதல் போன் கால் செய்தது எதற்காக? அந்த காவல் துறை அதிகாரி 6 நிமிடங்கள் கழித்து, 9.01-க்கு ஞானசேகரனின் போனுக்கு கூப்பிடுகிறார். அது எதற்காக? குற்றம் செய்தபிறகு, குற்றவாளி அழைக்கக்கூடிய முதல் போன் காலில் காவல் துறை அதிகாரியை அழைத்துள்ளார். அதுகுறித்து விசாரித்தீர்களா? அதை குற்றப்பத்திரிகையில் கொண்டு வந்தீர்களா? அதிகாரிக்கும் ஞானசேகரனுக்கு என்ன தொடர்பு?
இந்த கேள்வியை நான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன் என்றால், மே 14-ம் தேதி, ஞானசேகரன் மீது இரண்டாவது எஃப்ஐஆரை சிபிசிஐடி போலீஸார் பதிவு செய்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுபோல வேறு மாணவிகள் யாரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா? அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இது முதல் வழக்கா? இல்லை ஏற்கெனவே இதுபோன்ற பல வழக்குகள் உள்ளதா? அரசு மே 14-ம் தேதி பதிவு செய்த எஃப்ஐஆரையும் அரசு ரகசியமாக வைத்துக் கொண்டனர். பாலியல் வன்கொடுமை மற்றும் ஒரு வழக்கு என்று சிபிசிஐடி இரண்டாவது எஃப்ஐஆர் பதிவு செய்தனர். அது எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை. அதனால்தான் இந்த கேள்வியை கேட்கிறேன்.
குற்றம் செய்தபிறகு ஞானசேகரன், டிச.24-ம் தேதி சிடிஆர் அறிக்கையின்படி, 170-வது திமுக வட்டச் செயலாளர் கோட்டூர் சண்முகத்துடன், அன்று காலையில் இருந்து மாலை வரை 5 முறை போனில் பேசியிருக்கின்றனர். அன்று காலை 7.27-க்கு துவங்கி மாலை 4.01 வரை 5 முறை இருவரும் பேசியுள்ளனர். அதன்பிறகுதான் ஞானசேகரனை கோட்டூர்புரம் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்து செல்கின்றனர். இருவரும் ஒரு 4 மணி நேரம் பேசவில்லை. அந்த நேரத்தில் ஞானசேகரன் காவல் நிலையத்துக்குள் இருந்திருக்க வேண்டும். வெளியே வந்தபிறகு, ஞானசேகரனும் கோட்டூர் சண்முகமும் போனில் பேசியிருக்கின்றனர்.
எதற்காக கோட்டூர்புரம் போலீஸார் டிச.24-ம் தேதி ஞானசேகரனை அழைத்துச் சென்றார்கள்? எதற்காக வெளியே விட்டீர்கள்? ஆதாரங்களை அழிக்கவா? செல்போன் ஆதாரங்களை அழிக்கவா? அல்லது செல்போனில் இருக்கக்கூடிய வீடியோவை அழிக்கவா? அல்லது அண்ணா பல்கலைக்கழகத்தில் சிசிடிவி கேமரா செயல்பட்டிருந்தால், அதையெல்லாம் கழற்றி வீசவா? எதற்காக ஞானசேகரன் டிச.24-ம் தேதி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் இருந்து வெளியே விடப்பட்டார்?
அதைவிட முக்கியமான விஷயம், ஞானசேகரன் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த நேரத்தில், கோட்டூர் சண்முகமும், அமைச்சர் மா.சுப்பிரமணியனும் பேசுகின்றனர். அன்றிரவு 8.30 மணிக்குப் பேசிக்கொள்கின்றனர். 8.32 மணிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கோட்டூர் சண்முகமும் மறுபடியும் பேசிக்கொள்கின்றனர். எதற்காக யாரைக் காப்பாற்ற இவ்வளவு பதற்றம்?
அதேபோல், அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயில் பொறுப்பாளராக இருக்கக்கூடிய அதிகாரி நடராஜன் என்பவரும், கோட்டூர் சண்முகமும், டிச.23-ம் தேதி முதல் டிச.26-ம் தேதி வரை பேசியுள்ளனர். மொத்தமாக, இந்த 4 நாட்களில் இவர்கள் இருவரும் 13 முறை பேசியுள்ளனர். அதேபோல், டிச.24-ல் ஞானசேகரன் வெளியே வந்த நேரத்தில் கோட்டூர் சண்முகம் இன்னொரு காவல்துறை அதிகாரியுடன் இருமுறை செல்போனில் பேசியுள்ளார்.
டிச.24-ம் தேதி இரவு என்பது மிகவும் முக்கியமானது. காரணம் ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு பதிவு செய்துள்ள 11 பிரிவுகளில், ஆதாரங்களை அழித்ததாக ஒரு பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அப்படியென்றால், என்ன ஆதாரம் அழிக்கப்பட்டது? அதன்பிறகு, 25-ம் தேதி ஞானசேகரன் கைது செய்யப்பட்ட பிறகு, அண்ணா பல்கலை. சிசிடிவி வேலை செய்யவில்லை என்று கூறுகின்றனர். அதேநேரம், ஞானசேகரன் மீது இன்னொரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என மே14-ம் தேதிதான் கூறுகின்றனர். அது எந்த நிலையில் இருக்கிறது என்றுகூட யாருக்கும் தெரியாது.
கோட்டூர் சண்முகத்துக்கு எதற்காக இவ்வளவு பதற்றம்? சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினார்களா? அவரிடம் வாக்குமூலம் பெற்றீர்களா? கோட்டூர் சண்முகம் எந்த காவல் துறை அதிகாரியிடம் போனில் பேசினார் அவரிடம் விசாரணை நடத்தினீர்களா? அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை விசாரணைக்கு அழைத்தீர்களா? அதேநேரம், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இரு காவல் துறை அதிகாரிகள், எஃப்ஐஆர் வேண்டாம், வாழ்க்கை கெட்டுப்போய்விடும் என்று பேசியிருக்கிறார்கள். அதேநேரம், மாணவியின் எஃப்ஐஆரை எடுக்க டிச.24-ம் தேதி முழுவதும் காலதாமதம் செய்கின்றனர்.
’யார் அந்த சார்?’ என்ற கேள்வியைத் தான் ஆரம்பத்தில் இருந்து கேட்கிறோம். நான் சொல்வதெல்லாம் நேரடியாக தொலைபேசியில் பேசியிருக்க கூடிய விவரங்கள். வாட்ஸ் அப் காலில் பேசியுள்ளனர். அதற்கான அக்சஸ் எல்லாம் காவல் துறையிடம் உளள்ளது. கோட்டூர் சண்முகம் விசாரிக்கப்பட வேண்டிய நபர். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் விசாரிக்கப்பட வேண்டிய நபர்.
முதல்வருக்கு இரண்டு பொறுப்புகள் இரண்டு பதவிகள் இருக்கிறது. கட்சி சம்பந்தப்பட்டிருக்கிறது, காவல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். இத்தனை விஷயங்கள் நடந்திருக்கிறது. எனவே கட்சித் தலைவராக முதல்வர் ஸ்டாலின் ஏன் எதுவும் பேசவில்லை. 2024-ம் ஆண்டு டிச.24-ம் தேதி பல விஷயங்கள் நடந்துள்ளன. அங்கேதான் ‘யார் அந்த சார்?’ ஒளிந்திருக்கிறார். நான் எதற்கும் பயப்படப் போவது கிடையாது. ஒரு விஷயத்தைக் கூறினேன். உடும்புபிடியாகப் பிடித்து கடைசிவைரை போகப்போகிறேன்.
அண்ணா பல்கலை. மாணவியின் சகோதரானாக நான் சாட்டையால் அடித்துக் கொண்டேன். எனவே, தொடர்ந்து கேள்விகள் கேட்பேன். இதை நான் விடப்போவது இல்லை. இதற்கும் அவர்கள் ஏதாவது கூறுவார்கள். அடுத்த 48 மணி நேரம் கழித்து அடுத்த விஷயத்தைப் பேசுவேன். எனவே, முதல்வர் பதில் சொல்ல வேண்டும்” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கில், திமுக நிர்வாகி ஞானசேகரனுக்கு, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. #SaveOurGirls_NotYourSir
எனினும், இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள், இன்னமும்… pic.twitter.com/kcL24p1ev8
— K.Annamalai (@annamalai_k) June 3, 2025