போபால்: “முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்தும்போது ராகுல் காந்தி தனது காலணிகளை கழற்றாதது எனக்குப் பிடிக்கவில்லை” என்று மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மோகன் யாதவ், “மக்களவை எதிர்க்கட்சி தலைவர் வருகை குறித்து எனக்கு தகவல் கிடைத்தது. ஆனால் அவர் தனது பாட்டி இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்தும்போது தனது காலணிகளை கழற்றாதது எனக்குப் பிடிக்கவில்லை. இது நமது கலாச்சாரத்துடன் ஒத்துப்போகவில்லை” என்று தெரிவித்தார்.
போபாலுக்கு வந்த ராகுல் காந்தி, காங்கிரஸின் ‘சங்கதன் ஸ்ராஜன் அபியான்’- ன் ஒரு பகுதியாக அவர் நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனையடுத்து அவர் தனது பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியின் புகைப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியின்போது அவர் காலணி அணிந்துகொண்டு அஞ்சலி செலுத்தியது இப்போது பெரும் சர்ச்சையை உருவாகியுள்ளது.
மத்தியப் பிரதேசம் வந்துள்ள ராகுல் காந்தி போபாலில் உள்ள மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் அரசியல் விவகாரக் குழுவின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, மாநிலத்தின் அரசியல் சூழல் குறித்து விவாதிக்கவுள்ளார். அதன்பிறகு, அவர் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் கலந்துரையாடுகிறார்.