திரையுலகத்தை விட்டே போய்விடலாம் என்று கூட யோசித்திருக்கிறேன் என்று ‘அக்யூஸ்ட்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் உதயா பேசினார்.
ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம். தங்கவேல் இணைந்து தயாரித்துள்ள படம் ‘அக்யூஸ்ட்’. இதில் உதயா நாயகனாக நடித்துள்ளார். அவருடன் அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கியுள்ள இப்படத்துக்கு நரேன் பாலகுமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பல்வேறு திரையுலகினரும் கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் உதயா பேசும்போது, “எனது தாயார் கடவுளாக இருந்து என்னை வழிநடத்துகிறார். என்னை அவர் எங்கிருந்தோ பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார், ஆசீர்வதித்துக் கொண்டே தான் இருக்கிறார்.
திரையுலகத்தை விட்டே போய் விடலாம் என்று கூட யோசித்திருக்கிறேன். ஆனால், எனது தன்னம்பிக்கை காரணமாக இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன். எனவே அனைவரும் நம்பிக்கையுடன் உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ‘அக்யூஸ்ட்’ எனது மிக முக்கிய படம். எனது 25-வது ஆண்டில் இப்படி ஒரு படம் கிடைத்திருப்பது எனது பாக்கியம். இந்த படத்துக்காக எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர்களுக்கு மிக்க நன்றி.
இயக்குநர் அற்புதமாக ‘அக்யூஸ்ட்’ படத்தை உருவாக்கியிருக்கிறார், அவருக்கு நன்றி. மிகச் சிறந்த இயக்குநர் அவர். நரேன் பாலகுமார் இசை அருமை. உடன் நடித்தவர்களுக்கும், பணியாற்றிய அனைவருக்கும் மிகுந்த நன்றி. இவர்கள் அனைவரும் எனது குடும்ப உறுப்பினர்கள் மாதிரி தான். எங்கள் அனைவரின் உழைப்பில் சிறப்பாக உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ படம் வெற்றி பெறும் என மனமார நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.