புதுடெல்லி: இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்துவதால் இந்தியா சிறிய அளவிலேயே பாதிப்பை எதிர்கொள்ளும் என்று மத்திய எஃகு அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்திற்கான வரிகளை தற்போதுள்ள 25% இலிருந்து 50% ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இதன் காரணமாக, அமெரிக்காவுக்கான முக்கிய ஆசிய ஏற்றுமதியாளர்களான தென் கொரியா மற்றும் வியட்நாமில் உள்ள எஃகு உற்பத்தியாளர்களின் பங்குகளில் திங்களன்று சரிவு ஏற்பட்டது.
அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் இரும்பில் தோராயமாக கால் பகுதி, அண்டை நாடுகளான மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும், ஜப்பான், தென் கொரியா மற்றும் ஜெர்மனி போன்ற ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நெருங்கிய நட்பு நாடுகளிலிருந்து இரும்பை அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இந்தியாவிடம் இருந்து இரும்பை இறக்குதி செய்வது மிகவும் குறைவு.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை தெரிவித்த மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமி, “சிறிய தாக்கம் இருக்கும்… நாம் (அமெரிக்காவுக்கு) பெரிய அளவில் ஏற்றுமதி செய்யவில்லை.” என்று தெரிவித்தார்.