தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் கஜா புயல் சேதம், காண்டாமிருக வண்டு தாக்குதல், வெள்ளை ஈ தாக்குதலைத் தொடர்ந்து 68 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘தஞ்சாவூர் வாடல் நோய்’ தாக்குதலால் தென்னை மரங்கள் சேதமடைந்து வருகின்றன. இதனால் தென்னை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தஞ்சாவூரில் நெல் சாகுபடிக்கு நிகராக, தென்னை சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் கிழக்கு கடற்கரை காற்று வீசுவதால் தென்னை மர வளர்ச்சிக் கும், மகசூலுக்கும் பெரிதும் உதவி வருவதால், பெரும்பாலான விவசாயிகள் தென்னை சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய வட்டங்களில் சுமார் 50 லட்சத்துக்கும் அதிகமான தென்னை மரங்கள் உள்ளன.
இந்த நிலையில் தற்போது தென்னை மரங்களில் ‘தஞ்சாவூர் வாடல் நோய்’ எனப்படும் ஒருவித வைரஸ் நோய் பரவி வருவதால் தென்னை மரங்கள் காய்ந்து, கருகி பட்டுப் போவதுடன், அடுத்தடுத்த மரங்களுக் கும் பரவும் அபாயம் இருப்பதால் தென்னை விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்து பொன்னவராயன்கோட்டையைச் சேர்ந்த விவசாயி வா.வீரசேனன் கூறியது: 2018-ல் இப்பகுதியில் வீசிய கஜா புயலில் சுமார் 5 லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.
மேலும், காண்டாமிருக வண்டு, கருந்தலைப்புழு, சிகப்பு கூன் வண்டு, வேர்ப்புழுக்கள், நத்தைப் பூச்சி, கோரிட் பூச்சி, மாவுப் பூச்சி, செஞ்சில் பூச்சி, கரையான், குறுத்தழுகல் நோய், அடித்தண்டு அழுகல் நோய், வெள்ளைப் பூச்சி, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் என 13 வகையான பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலுக்கு தென்னை மரங்கள் ஆளான நிலையில், தற்போது தஞ்சாவூர் வாடல் நோய் தாக்குதல் என்பது தென்னை விவசாயிகளை நிலை குலைய வைத்துள்ளது. இந்த வாடல் நோய், கிருமிகள் மூலம் பரவக்கூடியது. தற்போது ஏற்பட்டுள்ள தட்ப, வெப்ப நிலையின் காரணமாக இந்த நோய் வெளிப்பட்டுள்ளது. இந்த நோயை நிரந்தரமாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து தோட்டக்கலை துறை துணை இயக்குநர் வெங்கட்ராமன் கூறியது: பட்டுகோட்டை பகுதியில் ஒரு சில இடங்களில் ஓரிரு மரங்களில் இந்த தஞ்சாவூர் வாடல் நோய் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இதை கட்டுப்பட்டுத்த விவசாயிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு செயல் விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நோய் மண் மற்றும் நீர் மூலம் பரவும். மண்ணில் நீண்ட காலம் வாழும் தன்மையுடையது. மரத்துக்கு வட்டப்பாத்தி முறையில் அல்லது சொட்டு நீர் மூலம் தண்ணீர் பாய்ச்சினால் இந்த நோய் பரவுவது தடுக்கப்படும்.
10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 1 சதவீத போர்டோ கலவையை 40 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து மரத்தை சுற்றி 2 மீட்டர் வட்டப் பாத்தியில் மண் நன்கு நனையுமாறு 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை ஊற்ற வேண்டும். ஹேக்சாகோனசோல் மருந்தை வேர் வழியாக கொடுக்க வேண்டும். மேலும், மரங்கள் காய்ந்து, வாட ஆரம்பித்தால் உடனடியாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.
தஞ்சாவூர் வாடல் நோய் பெயர் வந்தது எப்படி? – 1952ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் அதிகளவிலான தென்னை மரங்கள் நோய்த் தாக்குதல் காரணமாக காய்ந்து, கருகின. அப்போது இதற்கு ‘தஞ்சாவூர் வாடல் நோய்’ என பெயரிப்பட்டது. அதன்பின் இந்த நோய்த் தாக்கம் தொடர்ந்து இருந்ததால், 1958ல் முதல்வராக இருந்த காமராஜர் உத்தரவின்பேரில், தென்னையில் ஏற்படும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தவும், தென்னை உற்பத்தியை அதிகரிக்கவும், பட்டுக் கோட்டையை அடுத்த வேப்பங்குளம் கிராமத்தில் 1958ல் தென்னை ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்டது.
அதன்பின், இந்தப் பகுதியில் இந்த நோயின் தாக்கம் ஏற்படவில்லை. சுமார் 67 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நோய் மீண்டும் இப்பகுதியில் தலை காட்டத் தொடங்கியுள்ளதால் இப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.