1989-ல் பாமக என்ற கட்சியை தொடங்கிய போது, “எனது வாரிசுகள் கட்சியிலோ, வன்னியர் சங்கத்திலோ எந்தப் பொறுப்புக்கும் வரமாட்டார்கள். ஒருவேளை அப்படி நடந்தால் என்னை நடுரோட்டில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்” என்று சத்தியம் செய்த ராமதாஸ், இன்று சவுக்கடி பட்ட வேதனையில் இருக்கிறார்.
ராமதாஸ் பலமுறை கருணாநிதியின் வாரிசு அரசியலை வசைபாடி இருக்கிறார். இப்போது அதையெல்லாம் நினைவுகூரும் திமுக-வினர், “கட்சிக்குள் குடும்ப ஆதிக்கத்தை அனுதித்த கலைஞர் அதையெல்லாம் எப்படி சமாளித்தார் என்பதை அவரிடமிருந்து அய்யா ராமதாஸ் படித்துக்கொள்ள தவறிவிட்டாரே” என்று வருத்தப்படுகிறார்கள்.
திமுக-வில் முதலில் ஸ்டாலினை வைத்துத்தான் வாரிசு அரசியல் பிரச்சினை வெடித்தது. குடும்பத்துக்குள் அல்ல… வைகோ போன்ற வெளி ஆட்கள் மூலம் அந்தப் பிரச்சினைகள் தலை தூக்கியது. வைகோ எழுப்பிய உரிமை நாதம் கட்சிக்கே ஆபத்தை உண்டாக்கும் அளவுக்குப் போனது. அப்போதும் உணர்ச்சிவசப்படாத கருணாநிதி, அதை சாதுர்யமாக சமாளித்தார். விளைவு இப்போது, “தமிழர்களை காப்பாற்ற ஸ்டாலினை விட்டால் வேறு நாதியில்லை” என்ற நிலைக்கு வந்திருக்கிறார் வைகோ.
மகள் கனிமொழிக்கு கட்சிக்குள் ஒரு அங்கீகாரத்தைக் கொடுக்க நினைத்தார் கருணாநிதி. இதற்கு தொடக்கத்திலேயே குடும்பத்துக்குள் எதிர் வினைகள் வந்தன. அதனால், கொஞ்சம் ஆறப்போட்டு சமயம் பார்த்து மகளுக்கு தான் செய்ய நினைத்ததைச் செய்து முடித்தார். அடுத்ததாக மகன் அழகிரி மதுரையில் இருந்துகொண்டு குடைச்சல் கொடுத்தார். அவர் சென்னைக்கு வருகிறார் என்றாலே கோபாலபுரமே அலறிய காலங்களும் உண்டு. அந்தளவுக்கு தனக்காகவும் தனது விசுவாசிகளுக்காகவும் தந்தையிடம் மோதினார் அழகிரி.
இதையெல்லாம் பார்த்துவிட்டு, எதிர்காலத்தில் மகன் அழகிரியால் குடும்பத்துக்குள் அரசியல் சண்டை வந்துவிடக் கூடாது என முடிவெடுத்த கருணாநிதி, அழகிரியை சமயம் பார்த்து டெல்லி பக்கம் திருப்பிவிட்டார். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவரை மத்திய அமைச்சராகவும் ஆக்கினார். மத்திய அமைச்சராக இருந்தாலும் அவர் மதுரைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதற்காகவே அவரை தென்மண்டல செயலாளராக்கினார். திருமங்கலம் இடைத் தேர்தலில் திமுக-வை ஜெயிக்க வைத்ததற்காக அழகிரிக்கு இந்தப் பரிசு என கட்சியினரிடம் தனது நடவடிக்கையை நாசூக்காக நியாயப்படுத்தவும் செய்தார் கருணாநிதி.
அப்படியும் ஒருகட்டத்தில் அழகிரி ஸ்டாலினுக்கு எதிராக வந்து நின்றார். அப்போது அவர் செய்த ரகளைகளைப் பார்த்துவிட்டு இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்த கருணாநிதி, அழகிரியையும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியை விட்டே நீக்கினார். கட்சிக்குள் இத்தனை களேபரங்கள் நடந்தாலும் இன்றைக்கு ராமதாஸை ஒதுக்கித் தள்ளியது போல் யாரும் கருணாநிதிக்கு எதிராக நிற்கவில்லை.
அதேபோல், வயது முதிர்ந்த நிலையிலும் தலைவர் பதவியை யாருக்கும் விட்டுத்தராமல் தன்னிடமே வைத்திருந்தார் கருணாநிதி. அதனால் தான் கட்சிக்குள் அவர் நினைத்ததெல்லாம் நடந்தது. கட்சியின் நலன் கருதி ஒட்டுமொத்த குடும்பமும் தந்த அழுத்தத்துக்குப் பிறகு தான் ஸ்டாலினை செயல் தலைவராகவே அங்கீகரித்தார்.
இறுதி மூச்சு வரைக்கும் தலைவர் பதவியை தன்னிடமே வைத்திருந்த கருணாநிதி, தனக்குப் பின்னால் கட்சிக்குள்ளோ, குடும்பத்துக்குள்ளோ எந்தவித அதிகார யுத்தமும் வந்துவிடாதபடி அனைத்தையும் செய்து முடித்துவிட்டே நிம்மதியானார். அவரது மறைவுக்குப் பிறகு கொஞ்சம் முரண்டு பிடித்த அழகிரியும் இப்போது ஸ்டாலினை அருமைக்குரிய தம்பியாக பார்க்க ஆரம்பித்து விட்டார்.
இதையெல்லாம் சுட்டிக்காட்டும் திமுக-வினர், “கலைஞரிடம் இருந்த இந்த சாதுர்யம் அய்யா ராமதாஸிடம் இல்லை என்பது இப்போது தைலாபுரத்தில் நடக்கும் சம்பவங்கள் சொல்கின்றன. கலைஞரை போல் அல்லாமல் முன்னதாகவே மகனுக்கு கட்சித் தலைவர் பதவியைக் கொடுத்து அழகு பார்த்தார் ராமதாஸ். ஆனால், 35 ஆண்டுகள் ராமதாஸுக்கு இருந்த பொறுமை அன்புமணிக்கு இல்லாமல் போய்விட்டது. தான், தனது மனைவி, பிள்ளைகள், தனது சுற்றம் என தன்னைச் சுற்றி ஒரு வளையத்தை ஏற்படுத்திக் கொண்டவர், கட்சியை தனது தனிப்பட்ட சொத்தாகவே நினைத்துவிட்டார்.
ஆனால், கலைஞர் குடும்பத்தில் யாரும் அப்படி நினைக்கவில்லை. ‘என் உயிரினும் மேலான உடன் பிறப்பே’ என்ற கலைஞரின் கரகர குரலுக்குத்தான் திமுக தொண்டன் கட்டுப்பட்டுக் கிடக்கிறான் என்பதை தலைவரின் குடும்பம் நன்றாகவே உணர்ந்து வைத்திருந்தது. அதனால், தலைவரின் பேச்சுக்கு மறுபேச்சுப் பேசத் தயங்கியது அந்தக் குடும்பம். ஆனால், ‘மகனை அரசியலுக்கு கொண்டு வந்து தவறு செய்துவிட்டேன்’ என 87 வயதில் ராமதாஸை புலம்ப வைத்திருக்கிறார் மகன் அன்புமணி” என்கிறார்கள்.