அரியலூர்: ராமதாஸை தலைவராக ஏற்றுக்கொண்டால், தமிழக முதல்வர் பதவி அன்புமணிக்கு கிடைக்கும் என்று வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி கூறினார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாமக நேற்று நடைபெற்ற பாமக மாவட்டப் பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பு.தா.அருள்மொழி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வன்னியர் சங்கமும், பாமகவும் தொய்வின்றி மக்கள் பணியாற்ற ஆயத்தமாகி விட்டன. கட்சி, சங்கத்தை உருவாக்கியவரே ராமதாஸ்தான். அவர்தான் கட்சிக்குத் தலைவர். அவர் உருவாக்கிய இந்த அமைப்பில் எந்த சலசலப்பும் இல்லை. கட்சிக்கு அன்புமணி தலைவர் கிடையாது என்று ராமதாஸ் சொல்லிவிட்டார். பிறகு ஏன் நான்தான் தலைவர் என்று அன்புமணி சொல்லிக் கொள்கிறார்?
ராமதாஸ் பேச்சைக் கேட்டு நடந்தால், அன்புமணிக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அவரை தமிழக முதல்வராக்குவதாக ராமதாஸ் கூறுகிறார். எங்களுடன் சேர்ந்து ராமதாஸை தலைவராக ஏற்றுக்கொண்டால், அன்புமணிக்கு முதல்வர் பதவி கிடைக்கும். இவ்வாறு பு.தா.அருள்மொழி கூறினார்.