சென்னை: பசுமை வழித்தடம் திட்டம் 3-ல், துணைமின் நிலையங்களுக்கு அதிக மின்சாரம் எடுத்துச் செல்லும் வகையில், 400 கிலோவோல்ட் திறனில் மின்வழித் தடங்களை மின்வாரியம் அமைக்க உள்ளது.
தமிழகத்தில் காற்றாலை, சூரியசக்தி மின்நிலையங்களை அமைக்க சாதகமான சூழல் நிலவுகிறது. எனவே, தனியார் நிறுவனங்கள் அமைக்கும் பசுமை மின்நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பல்வேறு பகுதிகளுக்கு மின்வாரியம் எடுத்துச் செல்கிறது. ஜெர்மனியின் கே.எஃப்.டபிள்யூ. வங்கி உதவியுடன் பசுமை வழித்தடம் (கிரீன் காரிடார்) திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது.
பசுமை வழித்தடம் திட்டம் 1-ல் ரூ.1,100 கோடி செலவில், திண்டுக்கல் மாவட்டம், தென்னம்பட்டியில் 400 கிலோவோல்ட் மின்நிலையமும், தென்னம்பட்டி முதல் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வரை 400 கிலோவோல்ட் வரை இரட்டை சுற்று மின்வழித் தடமும் அமைக்கப்பட உள்ளன.
பசுமை வழித்தடம் திட்டம் 2-ல், ரூ.1,006 கோடி செலவில் திருநெல்வேலி மாவட்டம், சமூகரெங்கபுரத்தில் 400 கிலோவோல்ட் துணைமின் நிலையம் அமைக்கப்படுகிறது. மேலும், திருப்பூரில் உள்ள பூளவாடி, கொங்கல் நகர், கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தலில் தலா 230 கிலோவோல்ட் திறனில் துணைமின் நிலையங்களும், அவற்றை இணைக்க அதே திறனில் வழித்தடங்களும் அமைக்கப்படுகின்றன.
தற்போது, பசுமை வழித்தடம் திட்டம் 3-ஐ செயல்படுத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ள நிலையில், மின்வழித் தடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் தென்மாவட்டங்களில் காற்றாலை, சூரியசக்தி மின்நிலையங்கள் அதிகம் அமைக்கப்பட்டு வரப்படுகிறது.
மேலும், துணைமின் நிலையங்கள் தேவையான அளவு உள்ளது. எனவே, பசுமை வழித்தடம் திட்டம் 3-ல், தூத்துக்குடியில் 400 கிலோவோல்ட் திறனில் ஒரு துணைமின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. மற்றபடி, ஏற்கனவே உள்ள துணைமின் நிலையங்களுக்கு அதிக மின்சாரம் எடுத்துச் செல்லும் வகையில், 400 கிலோவோல்ட் மின்வழித் தடங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இடங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன’’ என்றனர்.