திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக பேட்டை போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்கள். வினாத்தாளை தேர்வாணையருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெறுகிறது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 106 கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 27-ம் தேதி நடைபெறவிருந்த பி.காம் பட்டப்படிப்பில் தொழிற்சாலை சட்டம் (இன்டஸ்ட்ரியல் லா) என்ற பாடத்தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அன்று நடக்கவிருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது. புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு நேற்று மறுதேர்வு நடத்தப்பட்டது. இதனிடையே பல்கலைக்கழக தேர்வு வினாத்தாள் கசிந்தது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, திருநெல்வேலி பேட்டை காவல் நிலையத்தில் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரட்டீஸ் புகார் அளித்தார்.
கடந்த 27-ம் தேதி நடைபெறவிருந்த தொழிற்சாலை சட்டம் பாடத்துக்கான வினாத்தாளை 26-ம் தேதி இரவு 10 மணிக்கு பல்கலைக்கழக தேர்வாணையரின் செல்போனுக்கு வாட்ஸ்அப்பில் அடையாளம் தெரியாதவர் அனுப்பியுள்ளார். இதனால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. வினாத்தாள் கசிந்ததற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் பேட்டை போலீஸார் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகள் 316 (நம்பிக்கை மோசடி செய்தல்) , 318 (ஏமாற்றுதல்), 3(5), தமிழ்நாடு அரசு பொதுத்தேர்வுகள் சட்டம் 3, 4 மற்றும் 5 (தேர்வு முறைகேடு) ஆகிய 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.