மதுரை: தமிழின் தொன்மை, பெருமையை மத்திய அரசு ஏற்காது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் தெரிவித்தார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களை நம்பி 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம். ஒவ்வொரு தேர்தலிலும் எங்கள் கட்சி வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது.
கன்னடர்களுக்கு தமிழர்கள் என்றாலே எப்போதும் வெறுப்புதான். கீழடி ஆய்வறிக்கையை மத்திய அரசு ஏற்காது. கீழடியில் வெறும் 2 ஏக்கரில் மட்டும்தான் ஆய்வு நடந்துள்ளது. நூறு ஏக்கரிலும் ஆய்வு நடத்தியிருந்தால் இன்னும் அரிய தகவல்கள் கிடைத்திருக்கும்.
அந்தப் பெருமையை தமிழர்களுக்கும், தமிழ் இனத்துக்கும் கொடுக்கத் தயங்குவார்கள். பிரதமர் மோடி எங்கே போனாலும் தமிழின் பெருமையைப் பேசுகிறார். புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் தமிழில் கல்வெட்டு வைக்கவில்லை. இதைத் தமிழக எம்பிக்களும் கேட்கவில்லை.
தமிழின் தொன்மை, பெருமையை எப்படி ஏற்பார்கள்? மத்திய அரசுத் தேர்வில் பெரியாருக்கு சாதி சாயம் பூசியதாக விஜய் குற்றம்சாட்டியுள்ளார். பெரியாரே ராமசாமி நாயக்கர் என எழுதி கையெழுத்திட்டுள்ளார். தமிழகத்தில் பெரியார் என வெளியிடப்பட்ட படம் மற்ற மாநிலங்களில் ராமசாமி நாயக்கர் என வெளியிடப்பட்டது.
அதேநேரம், கர்நாடகத்தில் இருந்து வந்த ராமசாமி பெரியாருக்கு தமிழ் என்றாலே வெறுப்பு. அவரை தமிழர்கள் தலைவராக, தந்தையாக ஏற்கிறார்கள். பாமகவில் ராமதாஸ், அன்புமணி பிரச்சினை கஷ்டமாக உள்ளது. ராமதாஸ் இவ்வளவு கஷ்டப்பட்டு பேசியிருக்க வேண்டியதில்லை. இருவரும் அமர்ந்து பேசினால் பிரச்சினை சரியாகவிடும். ராமதாஸ் மனதில் இருந்ததை வெளியே சொல்லிவிட்டார். பாமகவில் ஏற்பட்டிருப்பது சிறிய முரண். விரைவில் சரியாகிவிடும். இவ்வாறு சீமான் கூறினார்.