சென்னை: ஆட்டோ மீட்டர் கட்டணம் குறித்து தலைமைச் செயலர் ஆலோசித்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு மாற்றி அமைத்தது. அதன்பின் தனிநபர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதின்றம், மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்குமாறு 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தையை நடத்திய அரசு, 2 ஆண்டுகளைக் கடந்த பிறகும் கட்டணத்தை உயர்த்தவில்லை. இதற்கிடையே, இதுதொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆட்டோ ஓட்டுநர்களுடன் போக்குவரத்துத் துறை ஆலோசனை நடத்தி, கட்டணம் தொடர்பான பரிந்துரைகளைப் பெற்றது. ஆனால், கட்டணம் இறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தீவிர போராட்டங்களை ஓட்டுநர் சங்கங்கள் முன்னெடுத்தன. இதற்கிடையே, சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள போக்குவரத்துத் துறை அமைச்சரின் இல்லத்தில் அமைச்சர் சிவசங்கரை, தமி்ழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அ.ஜாஹிர் ஹுசைன், பொதுச்செயலாளர் ஆர்.வெற்றிவேல் ஆகியோர் சந்தித்து தொழிலாளர்களின் கோரிக்கையை முன்வைத்தனர்.
அப்போது, “மினி பேருந்து குறித்த இறுதிக்கட்ட பணிகளில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இருப்பதால், ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோ மீட்டர் கட்டணம் தலைமைச் செயலாளரின் ஆலோசனையில் உள்ளது. மீட்டர் கட்டணம் கூடிய விரைவில் மாற்றப்படும்” என அமைச்சர் கூறியதாக, தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.