புதுடெல்லி: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் புதிய வரிவிதிப்பு மீதான தடையை அந்த நாட்டு உயர் நீதிமன்றம் நீக்கி உள்ளது. இதன்மூலம் அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு நடைமுறை தொடரும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். கடந்த ஏப்ரல் 2-ம் தேதி இந்தியா, சீனா உட்பட 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கடுமையான வரிவிதிப்பை அவர் அறிவித்தார். புதிய வரிவிதிப்பை எதிர்த்து அமெரிக்காவின் குறு, சிறு நிறுவனங்கள் சார்பில் நியூயார்க்கில் உள்ள வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதே விவகாரம் தொடர்பாக ஜனநாயக கட்சிகள் ஆட்சி நடத்தும் மாகாணங்களின் அரசுகள் சார்பிலும் வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இரு வழக்குகளையும் விசாரித்த நியூயார்க் வர்த்தக நீதிமன்றம், அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு நடைமுறைக்கு கடந்த 28-ம் தேதி தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்க அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி மூர், நீதிதிகள் லோரி, டைக், பிராஸ்ட், ரெய்னா, டொரன்டோ, சென், ஹுகஸ், ஸ்ட்ரால், குன்னிங்கம், ஸ்ட்ரார்க் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், வர்த்தக நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதன்மூலம் புதிய வரிவிதிப்பு மீதான தடை நீக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து அமெரிக்க சட்ட நிபுணர்கள் கூறியதாவது: இந்தியா, சீனா, கனடா, மெக்ஸிகோ உட்பட பல்வேறு நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு பதிலடியாக கடந்த ஏப்ரலில் அவர் சமச்சீர் வரி வதிப்பு விகிதத்தை அறிவித்தார்.
இதன்படி சீன பொருட்களுக்கு அதிகபட்சமாக 145 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. இதுதொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி அண்மையில் சுமுக தீர்வு எட்டப்பட்டது. இதன்படி சீன பொருட்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருக்கிறது. வரிவிதிப்பு விவகாரம் தொடர்பாக இந்தியா, கனடா, மெக்ஸிகோ, ஐரோப்பிய ஒன்றியம் தரப்பில் அமெரிக்க அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் அமெரிக்காவின் 12 சிறு நிறுவனங்கள் மற்றும் ஐனநாயக கட்சி ஆட்சி நடத்தும் நியூயார்க், அரிசோனா உட்பட 12 மாகாண அரசுகள் சார்பில் புதிய விதிப்புக்கு எதிராக நியூயார்க்கில் உள்ள வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த வர்த்தக நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு புதிய வரிவிதிப்புக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த 11 நீதிபதிகள் அமர்வு, வர்த்தக நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது. அடுத்த விசாரணை ஜூன் 5-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. உயர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
உயர் நீதிமன்றம் யாருக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கும் என்பதை இப்போதைக்கு கணிக்க முடியாது. எனினும் பாதிக்கப்படும் தரப்பு உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும். இதை உச்ச நீதிமன்றம் விசாரித்து இறுதி தீர்ப்பினை வழங்கும்.
ஒருவேளை அதிபர் ட்ரம்பின் புதிய வரிவிதிப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தால்கூட அந்த தீர்ப்பை நீர்த்துப்போக செய்ய வாய்ப்பு இருக்கிறது. அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தில் அதிபருக்கு சிறப்பு அதிகாரங்கள் உள்ளன. அந்த சிறப்பு அதிகாரங்கள் மற்றும் சில சிறப்பு சட்டங்களை பயன்படுத்தி புதிய வரிவிதிப்பு நடைமுறையை தொடர அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுக்கக்கூடும். இவ்வாறு அமெரிக்க சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.