சென்னை: அஜித் உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து வில்லன் நடிகர் ராகுல் தேவ் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தவர் ராகுல் தேவ். அதற்கு முன்பு ‘வேதாளம்’ படத்தில் முக்கிய வில்லன்களில் ஒருவராக நடித்திருந்தார். அஜித் உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ராகுல் தேவ் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், “அஜித் உடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதற்கு முன்பு நாங்கள் மறக்கமுடியாத ஒரு படமான ’வேதாளத்தில்’ பணியாற்றியிருந்தோம். அவர் எங்கள் தொழிலில், தமிழில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள மிகவும் அற்புதமான மனிதர்களில் ஒருவர். அவர் மிகவும் உதவிகரமாக இருப்பவர்.
ஒருமுறை செட்டுக்கு ஒரு பார்வையாளர் வந்திருந்தார். அந்த தம்பதி தங்கள் மகனை இழந்திருந்தனர். அவர்கள் மிகவும் சோகமான ஒரு தருணத்தில் அஜித்தை சந்தித்தனர். அவர் அவர்களுக்கு நிறைய தன்னம்பிக்கை ஊட்டினார். அவர் மிகவும் பாசமான மனிதர். மென்மையானவர்.
கொல்கத்தாவில் துர்கா பூஜையின் போது படத்தின் க்ளைமாக்ஸ் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 வரை காட்சிகளை படமாக்கினோம். தினமும் இரவு முழுவதும் பணிபுரிந்தபிறகு, அவர் உப்புமா, இட்லி சமைத்துக் கொடுப்பார். எனக்கு மட்டுமல்ல, 70, 80 பேர் அடங்கிய ஒட்டுமொத்த படக்குழுவுக்கும். சமைப்பது என்றால் வெறும் மேற்பார்வை அல்ல, அவரே முன்னின்று அனைத்தையும் செய்வார். வெங்காயம் வெட்டுவது முதல் அனைத்தையும் அவரே செய்வார்.
நாங்கள் முதன்முதலில் சந்தித்தபோது, தனது வீட்டிலிருந்து என்ன கொண்டு வரட்டும் என்று கேட்டார். எதுவானாலும் சரிதான் என்று சொன்னேன். மறுநாள், ஏராளமான காலை உணவுப் பொருட்களுடன் வந்து, அதில் இரண்டு பெரிய டப்பாக்களை என்னிடம் கொடுத்தார். அது இரண்டு பேர் சேர்ந்து வேலை செய்வதற்கான வெறும் சந்திப்பு மட்டுமே அல்ல. அவர் அதீத விருந்தோம்பல் பண்பு கொண்டவர்” என்று ராகுல் தேவ் தெரிவித்தார்.