அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் குஜராத் டைட்டன்ஸ் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.
ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 3 தோல்விகளுடன் 18 புள்ளிகளை குவித்து முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இருப்பினும் அந்த அணி லீக் சுற்றை முதல் இரு இடங்களுக்குள் நிறைவு செய்வதில் கவனம் செலுத்தக்கூடும். ஏனெனில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தலா 17 புள்ளிகளுடன் முறையே 2 மற்றும் 3-வது இடங்களில் உள்ளன. இந்த இரு அணிகளுக்கும் தலா 2 ஆட்டங்கள் மீதம் உள்ளன.
குஜராத் அணியின் பேட்டிங்கில் டாப் ஆர்டர் வலுவாக உள்ளது. 617 ரன்கள் குவித்துள்ள சாய் சுதர்சன், 601 ரன்கள் சேர்த்துள்ள ஷுப்மன் கில், 500 ரன்கள் எடுத்துள்ள ஜாஸ் பட்லர் ஆகியோர் அணியின் வெற்றிகளில் பிரதான பங்கு வகித்துள்ளனர். இவர்கள் கூட்டாக ஒரு சதம், 16 அரை சதங்களை விளாசியுள்ளனர். தொடர் முழுவதும் இவர்கள் தொடர்ச்சியான செயல் திறனை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
கடைசியாக டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 200 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி வெற்றிகரமாக துரத்திய அசத்தியிருந்தது குஜராத் அணி. அந்த ஆட்டத்தில் சாய் சதர்சன் சதமும், ஷுப்மன் கில் 93 ரன்களும் விளாசியிருந்தனர். இவர்கள் பலம் இல்லாத லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சையும் பதம் பார்க்கக்கூடும்.
பந்துவீச்சிலும் குஜராத் பலத்துடன் காணப்படுகிறது. 21 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள பிரஷித் கிருஷ்ணா, தலா 15 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள முகமது சிராஜ், சாய் கிஷோர் ஆகியோர் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளித்து வருகின்றனர். இவர்களுடன் காகிசோ ரபாடா, ரஷித் கான் ஆகியோரும் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர்.
ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 7 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட லக்னோ அணி இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரை கவுரவமான முறையில் நிறைவு செய்வதில் கனவம் செலுத்தக்கூடும்.
லக்னோ அணி தனது கடைசி ஆட்டத்தில் 205 ரன்களை குவித்த போதிலும் வெற்றி பெறுவதற்கான வழியை கண்டறியவில்லை. இந்த சீசன் முழுவதுமே அந்த அணி பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்த போதிலும் பலம் இல்லாத பந்து வீச்சில் பல்வேறு ஆட்டங்களில் தோல்வியை தழுவியது. அவேஷ் கான், ஆகாஷ் தீப் சிங், ஷர்துல் தாக்குர் ஆகியோரால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
ஒரு சில ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட ரவி பிஷ்னோயிடம் இருந்து சீரான செயல் திறன் வெளிப்படவில்லை. திக்வேஷ் ராதி சிக்கனமாக ரன்களை வழங்கினாலும் அவரது பந்துவீச்சு எந்தவித திருப்புமுனையையும் ஏற்படுத்தவில்லை. கடந்த ஆட்டத்தில் நோட்புக் செலிபிரேஷன் மற்றும் அபிஷேக் சர்மாவுடன் வாக்குவாதம் செய்ததால் திக்வேஷ் ராதிக்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர், களமிறங்க முடியாது.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து துறையிலும் மேம்பட்ட செயல் திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே லக்னோ அணியால் தொடர்ச்சியாக 5-வது தோல்வியை சந்திப்பதை தவிர்க்க முடியும்.