பலாமு: மாவோயிஸ்ட் உயர்மட்ட கமாண்டர் துளசி புயின்யா ஜார்க்கண்ட், பலாமு காவல்துறையின் கூட்டு நடவடிக்கையின்போது சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ஜார்க்கண்டில் நடைபெறும் தொடர்ச்சியான நடவடிக்கையில், அம்மாநில போலீஸார் இன்று பலாமு மாவட்டத்தில் மாவோயிஸ்ட் கமாண்டர் துளசி புயின்யாவை சுட்டுக் கொன்றனர்.
இதுகுறித்து பேசிய ஜார்க்கண்ட் காவல்துறை செய்தித் தொடர்பாளர் மற்றும் ஐஜி அமோல் வி.ஹோம்கர், “பலாமுவில் இன்று அதிகாலை முதல் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கை நடந்து வருகிறது. இந்த நடவடிக்கையில் ஜார்க்கண்ட் ஜாகுவார் மற்றும் பலாமு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலில் ஒரு மாவோயிஸ்ட் தளபதி துளசி புயின்யா கொல்லப்பட்டார், ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. இம்மோதலின் போது பல மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் வீரர்கள் பெரிய அளவில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புயின்யாவின் குழுவில் இருந்த மாவோயிஸ்ட் நிதேஷ் யாதவின் தலைக்கு ரூ.15 லட்சம், சஞ்சய் கோத்ராம் தலைக்கு ரூ.10 லட்சம் வெகுமதி அறிவிக்கப் பெற்றவர்களாவர். இவர்களும் இந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த 15 ஆண்டுகளாக, நிதேஷ் யாதவ் ஜார்க்கண்ட் மற்றும் பிஹார் காவல்துறைக்கு ஒரு சவாலாக இருந்து வந்தவர். இந்நிலையில் இவர்கள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் காவல்துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் ஜார்க்கண்ட் ஜாகுவார் அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர். பாதுகாப்புப் படையினர் இந்த முழுப் பகுதியையும் சுற்றி வளைத்துள்ளனர். மாவோயிஸ்ட் தளபதி துளசி புயின்யாவின் உடல் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
பலாமு எஸ்.பி ரிஷ்மா ரமேசன் உட்பட ஜார்க்கண்ட் ஜாகுவார் உயர் அதிகாரிகள் அந்தப் பகுதியில் முகாமிட்டுள்ளனர். ஹுசைனாபாத், முகமதுகஞ்ச் மற்றும் ஹைதர்நகர் எல்லைப் பகுதிகளில் நிதேஷ் யாதவ் தனது குழுவுடன் ஒரு பெரிய சம்பவத்தை நடத்த திட்டமிட்டபோது இந்த மோதல் நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (மே 24, 2025) ஜார்க்கண்ட் ஜன் முக்தி பரிஷத் தலைவர் பப்பு லோஹ்ரா எனப்படும் சூர்யதேவ் லோஹ்ரா உட்பட இரண்டு பயங்கரமான மாவோயிஸ்ட்கள், லதேஹர் மாவட்டத்தின் இச்சாபர் காட்டில் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்.
இதேபோல், கடந்த திங்கட்கிழமை (மே 26, 2025) மாவோயிஸ்ட்களுடனான மற்றொரு மோதலில், லதேஹர் போலீஸார் ரூ.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த மணீஷ் யாதவை சுட்டுக் கொன்றனர், மேலும் ரூ. 10 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் குந்தன் சிங் கர்வாரை கைது செய்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.