சென்னை: “உங்களால் முடியவில்லை என்றால் விலகிக் கொள்ளுங்கள்” என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை காட்டமாக விமர்சித்துள்ளார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.
நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை தோனி ஏற்ற நிலையில் அதனால் அந்த அணி எதிர்பார்த்த மாயம் ஏதும் ஏற்படவில்லை. புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்தில் சிஎஸ்கே உள்ளது.
காயம் காரணமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இந்த சீசனின் பாதியில் விலகினார். அதன் பிறகு 8 ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸை தோனி கேப்டனாக வழிநடத்தி உள்ளார். அதில் 2 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த சீசனில் 13 ஆட்டங்களில் விளையாடி உள்ள தோனி, மொத்தம் 196 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த சூழலில் அவரை காட்டமாக விமர்சித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.
“தோனி களத்துக்கு வந்தாலே லெக் ஸ்பின்னர் வசம் பந்தை எதிரணியின் கேப்டன்கள் கொடுத்து விடுகின்றனர். அவருக்கு வயதாகிவிட்டது. அவரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது. அந்த பழைய வேகம் இல்லை. அடுத்த சீசனுக்கான அணியை கட்டமைக்க வேண்டுமென்றால் இப்படி இருந்தால் நடக்காது.
அவரிடமிருந்து அதிகம் நாம் எதிர்பார்க்க முடியாது. அதற்காக சொதப்பவும் கூடாது. முடியவில்லை என்றால் விலகி சென்று விட வேண்டும். அந்த முடிவை அவர்தான் எடுக்க முடியும்” என தனது யூடியூப் சேனலில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.