புதுடெல்லி: ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட தங்க நகை கடனுக்கான விதிமுறைகளை மறுபரிசீலனை செய்து, சிறுகடன் பெறுவோர் பயன்பெறும் வகையில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் ரிசர்வ் வங்கியை அறிவுறுத்தியுள்ளது.
முறைகேடுகளை தடுக்கும் நோக்கில், வங்கிகளில் தங்க நகை கடன் பெறும் விதிகளை கடுமையாக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் புதிய வரைவு கொள்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதன்படி, கடன் – மதிப்பு விகிதம் 75% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.100 மதிப்புள்ள தங்கநகைகளை அடமானம் வைத்தால், அதிகபட்சம் ரூ.75 மட்டுமே கடனாக பெற முடியும். இதுவரையில் நகையின் மதிப்பீட்டில் சுமார் 90% வரை கடன் வழங்கப்பட்டு வந்தது. இந்த விதியை அமல்படுத்தும்போது, கடன் தொகை கணிசமாக குறையும்.
புதிய விதிமுறைகளின்படி கடன் வாங்குபவர்கள் அடமானம் வைக்கப்படும் நகைக்கு, தான் உரிமையாளர் என்ற ஆதாரத்தை வழங்க வேண்டும். நகையின் உரிமை சந்தேகத்துக்குரியதாக இருந்தால் கடன் வழங்கப்படாது. அசல் ரசீதுகள் இல்லாதபட்சத்தில் கடன் பெறுபவர்கள் இந்த நகை தங்களுக்கு எப்படி உரிமையானது என்பதை விளக்கும் வகையில் ஒரு அறிக்கை தர வேண்டும்.
கடன் வழங்குபவர்கள், தாங்கள் பெறும் நகைகளின் தூய்மை, எடை மற்றும் மதிப்பு குறித்த சான்றிதழை வழங்க வேண்டும். அடமானம் வைக்கப்படும் நகையின் படத்தையும் இணைக்க வேண்டும். தங்க நகைகள், ஆபரணங்கள் மற்றும் குறிப்பிட்ட தங்க நாணயங்கள் மட்டுமே தங்க நகைக் கடனுக்கு பிணையமாக தகுதியுடையவை.
ஒரு கடனாளி அடகு வைக்கும் தங்க நகைகளின் மொத்த எடை 1 கிலோவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பிணையமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தங்கம், 22 காரட் தங்கத்தின் விலையின் அடிப்படையில் மதிப்பிடப்படும். இவ்வாறு பல விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
முதல்வர் ஸ்டாலின் கடிதம்: இதற்கு தமிழக அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக முதல்வர் ஸ்டாலினும் இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதினார். கடிதத்தில் முதல்வர் கூறியிருந்ததாவது:
விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான பயிர் கடன்களுக்கு தங்க நகைகளை ஈடாக ஏற்றுக்கொள்வதை தடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தங்கத்தை பிணையாக பெற்று வழங்கப்படும் கடன்கள் சரியான நேரத்தில், குறுகியகால பயிர் கடன்களுக்கான முதன்மை ஆதாரமாக விளங்குகிறது. குறிப்பாக, சிறு, குறு விவசாயிகள், குத்தகைதாரர்கள், பால் பண்ணை, கோழி பண்ணை, மீன்வளம் தொடர்பான தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த புதிய நடைமுறையால் பாதிக்கப்படுவார்கள்.
அவர்கள் அதிக வட்டி வசூலிக்கும் முறைசாரா மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத கடன் வழங்கும் நிறுவனங்களை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது அவர்களை சுரண்டலுக்கு ஆளாக்கும். அவர்களது கடன்சுமையை அதிகரிக்கும். எனவே, நகைக்கடனுக்காக முன்மொழியப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய இந்திய ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்திருந்தார். இதே கருத்தை வலியுறுத்தி ரிசர்வ் வங்கியின் கவர்னருக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் வழிகாட்டுதலின்கீழ், ரிசர்வ் வங்கிக்கு நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில், ‘ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக கடன் வாங்குபவர்களுக்கு விரைவான மற்றும் எளிதான கடன் அணுகலை உறுதி செய்ய வேண்டும். அதற்காக இந்த கடுமையான விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். மேலும், கடன் வழங்குநர்கள் புதிய விதிமுறைகளுக்கு மாற ஏதுவாக, இந்த புதிய விதிகளை 2026 ஜனவரி 1-ம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி தற்போது பொதுமக்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து வந்துள்ள கருத்துகளை மதிப்பாய்வு செய்து வருகிறது. புதிய விதிகளை செயல்படுத்துவது குறித்த தனது இறுதி முடிவை ரிசர்வ் வங்கிவிரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.