காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலில் 4-வது பாலாலயம் நடைபெற உள்ளதால் ஜூன் 5-ம் தேதி வரை மட்டுமே மூலவரை தரிசிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பஞ்ச பூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியது. இந்தக் கோயிலில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக இதுவரை 3 பாலாலயம் நடைபெற்றுள்ளன. தற்போது 4-வது பாலாலயம் ஜூன் 6-ம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து கோயில் செயல் அலுவலர் ப.முத்து லட்சுமி கூறியது: பஞ்சபூத ஸதலங்களில் நிலத்துக்கு உரியதாக காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார் குழலி சமேத ஏகாம்பரநாத சுவாமி கோயில் போற்றப்படுகிறது. இக்கோயிலில் 4-வது பாலாலயம் ஜூன் 6-ம் தேதி காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் நடைபெறும். மூலவர் கருவறையில் திருப்பணி செய்ய இருப்பதால் ஜூன். 5ம் தேதி வரை ஏகாம்பரநாதரை பக்தர்கள் தரிசிக்கலாம். அதன் பின்பு மகா கும்பாபிஷேகத்துக்கு பிறகே மூலவரை தரிசிக்க முடியும்.
யாகசாலையில் ஏகாம்பரநாதரை எழுந்தருளச் செய்வதற்காக அத்திமரத்தால் செய்யப்பட்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப் பெற்று தினசரி 4 கால பூஜைகள் நடைபெறும். பொதுமக்கள் யாகசாலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அத்திமர சிவலிங்கத்தை மட்டுமே தரிசிக்கலாம். 9 நவகுண்டம் அமைக்கப்பட்டு 35 சிவாச்சாரியார்கள் பாலாலய பூஜையை ஜூன் 4-ம் தேதி தொடங்கவுள்ளனர். பாலாலய சிறப்பு அபிஷேகம் ஜூன் 6-ம் தேதி நடைபெறுகிறது. ரூ.28.48 கோடி மதிப்பில் கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோயிலில் அமைந்துள்ள பல்லவ கோபுரம், சிவகங்கை தீர்த்தக் குளம், 1,000 கால் மண்டபம் மேல்தளம் பழுது பார்த்தல், கம்பா நதி தீர்த்தம் பழுது பார்த்தல், அபிஷேக நீர் மற்றும் மழைநீர் சிவகங்கை தீர்த்தக் குளத்துக்கு வரும் வகையில் கால்வாய் அமைத்தல் ஆகிய பணிகள் பெருமளவு நிறைவு பெற்று விட்டன. தெற்கு ராஜகோபுரம் பழுது பார்த்தல், 3-ம் பிரகாரம் தரைதளத்தில் கருங்கல் அமைக்கும் பணி, 4 மற்றும் 3-ம் பிரகாரத்தில் மதில் சுவர் அமைக்கும் பணியை பழமை மாறாமல் புதுப்பித்தல் ஆகிய பணிகள் நடந்து வருகின்றன.
நடராஜர் சந்நிதியும், 1,000 கால் மண்டப உட்புற பகுதி பழுது பார்த்தல் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்று பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. கோயில் ராஜகோபுரம் மீண்டும் ஒரு முறை வர்ணம் தீட்ட வேண்டிய நிலையில் இருந்து வருகிறது. அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் கும்பாபிஷேகத்தை நடத்த பரிசீலசனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.