சென்னை: சென்னையைச் சேர்ந்த வங்கிசாரா நிதி நிறுவனமான சுந்தரம் பைனான்ஸ் 2024-25-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை நேற்று வெளியிட்டது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் லோச்சன் கூறியதாவது: சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த 2024-2025-ம் நிதியாண்டில் வரிக்கு பிந்தைய தனிப்பட்ட லாபமாக ரூ.1,543 கோடியை ஈட்டியுள்ளது. இது, முந்தைய 2023-24-ம் நிதியாண்டில் ஈட்டிய லாபத்துடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் அதிகம். செயல்பாட்டு லாபம் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் நிறுவனம் வழங்கிய கடன் 9 சதவீதம் அதிகரித்து ரூ.28,405 கோடியைத் தொட்டுள்ளது. நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 17 சதவீதம் உயர்ந்து ரூ.51,476 கோடியாக உள்ளது.
கடந்த 2024-ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டுடன் ஒப்பிடும்போது 2025 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வழங்கப்பட்ட கடன்கள் 11 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த நிதியாண்டுக்கு 210 சதவீத இறுதி டிவிடெண்ட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.21 டிவிடெண்டாக கிடைக்கும்.
நிறுவனத்தின் லாப விகிதம் அதிகரித்து காணப்பட்டாலும் வழங்கப்பட்ட கடன்வளர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. இதற்கு, கடந்த நிதியாண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தல், மந்தமான திருவிழா சீசன், கடுமையான கோடை காலம் ஆகியவை காரணமாக அமைந்துவிட்டது.
ஆனால் நடப்பாண்டில் தனியார் நுகர்வு மேம்படுவதால் தனியார் துறை மூலதனம் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ராஜீவ் கூறினார்.