சென்னை: சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்ப்புற நிதி பத்திரங்களை தேசிய பங்கு சந்தை பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் சேர்த்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக நகராட்சி நிர்வாக துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நகர்ப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களுக்காக நிதி திரட்டும் பல்வேறு நவீன முன்னெடுப்புகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதில், சென்னை மாநகராட்சி நகர்ப்புற நிதி பத்திரங்கள் மூலம் உள்கட்டமைப்பு திட்டத்துக்கு நிதி திரட்டப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி 10 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 7.97% என நாட்டிலேயே மிக குறைந்த வட்டி விகிதத்தில் ரூ.200 கோடிக்கான நகர்ப்புற நிதி பத்திரங்களை வெற்றிகரமாக திரட்டியது. சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, இந்த பத்திரங்களை தேசிய பங்கு சந்தை பட்டியலில் சேர்த்தார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தலைமைச் செயலர் முருகானந்தம், தேசிய பங்கு சந்தை தலைமை பொருளாதார வல்லுநர் தீர்த்தங்கர் பட்நாயக், நிதி துறை செயலார் உதயச்சந்திரன், நகராட்சி நிர்வாக துறை செயலர் தா.கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிதி பத்திரங்கள் வெளியீட்டுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன்படி, ரூ.100 கோடி அடிப்படை வெளியீட்டு தொகையைவிட 4.21 மடங்கு அதிகமாக, அதாவது ரூ.421 கோடி மதிப்பிலான ஏலங்கள் தேசிய பங்கு சந்தையின் மின்னணு ஏலம் மூலம் பெறப்பட்டது. இது சென்னை மாநகராட்சியின் வலுவான நிதி மேலாண்மை மற்றும் திட்டத்தின் கட்டமைப்புக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ள வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
நிதி பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்ட இந்த நிதி, கொசஸ்தலை ஆறு வடிநில பகுதியில் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைப்புக்கு பயன்படுத்தப்படும். இது சென்னையின் வெள்ள தடுப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டை நோக்கமாக கொண்ட முக்கியமான உள்கட்டமைப்பு திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.