சென்னை: கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் முருங்கைக்காய் விலை கிலோ ரூ.30 ஆக குறைந்துள்ளது. தேசிய அளவில் முருங்கைக்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் முருங்கைக்காய் அதிக அளவில் விளைகிறது.
கோயம்பேடு சந்தையில் கடந்த வாரம் மொத்த விலையில் முருங்கைக்காய் கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று அதன் விலை கிலோ ரூ.30 ஆக குறைந்துள்ளது.
மற்ற காய்கறிகளான பீன்ஸ் ரூ.60, சாம்பார் வெங்காயம் ரூ.35, பச்சை மிளகாய் ரூ.25, வெண்டைக்காய், பாகற்காய் ரூ.20, கேரட் ரூ.18, பீட்ரூட், நூக்கல், உருளைக்கிழங்கு தலா ரூ.15, தக்காளி ரூ.13, பெரிய வெங்காயம் ரூ.12, முள்ளங்கி, கத்தரிக்காய், புடலங்காய் தலா ரூ.10, முட்டைக்கோஸ் ரூ.5 என விற்கப்பட்டு வருகிறது.
முருங்கைக்காய் விலை குறைந்திருப்பது குறித்து, கோயம்பேடு சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, ‘‘கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்பம் அதிகமாக இருந்ததால், முருங்கைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து இருந்தது. அதன்பிறகு, தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில், முருங்கைக்காய் வரத்து அதிகரித்து அதன் விலை குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய பிறகு, ஜூலை மாதத்தில் மீண்டும் முருங்கைக்காய் விலை உயர வாய்ப்புள்ளது’’ என்றனர்.