மும்பை: ஜேஎன்யு, ஜாமியாவை தொடர்ந்து துருக்கி பல்கலைக்கழகங்களுடனான ஒப்பந்தங்களை மும்பை ஐஐடி ரத்து செய்துள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் துருக்கி நாட்டின் ட்ரோன்கள் பயன்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து துருக்கி நாட்டுக்கான சுற்றுலாவை இந்தியர்கள் ரத்து செய்தனர். மேலும் துருக்கி நாட்டு பல்கலைக்கழகங்களுடன் ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தங்களை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமும் (ஜேஎன்யு) ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகமும் ரத்து செய்தன.
இந்நிலையில் மும்பை ஐஐடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “சமீபத்திய புவிசார் அரசியலில் துருக்கி தலையிட்டதன் காரணமாக, அந்த நாட்டு பல்கலைக்கழகங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன” என கூறப்பட்டுள்ளது.