புதுடெல்லி: வங்கதேசத்திடமிருந்து ஆயத்த ஆடைகள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய இந்தியா கட்டுப்பாடு விதித்துள்ளது. வங்கதேச அதிபராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு மாபெரும் போராட்டம் வெடித்தது. இதையடுத்து, பதவி விலகிய அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார். அப்போது முதல் இந்தியா, வங்கதேசம் இடையிலான வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக பிரிவு இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், “வங்கதேசத்திலிருந்து ஆயத்த ஆடைகளை இனி கொல்கத்தா மற்றும் நவ சேவா துறைமுகம் வழியாக மட்டுமே இந்தியாவுக்குள் கொண்டுவர அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மேகாலயா, அசாம், திரிபுரா மற்றும் மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநில எல்லையில் தரை வழியாக எந்த ஒரு பொருளையும் இந்தியாவுக்குள் கொண்டுவர (இறக்குமதி) தடை விதிக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடு காரணமாக ஆயத்த ஆடைகள் மட்டுமல்லாது, பிளாஸ்டிக் பொருட்கள், மரச்சாமான்கள், குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள், பருத்தி மற்றும் பருத்தி நூல் கழிவுகள் உள்ளிட்டவற்றின் இறக்குமதி பாதிக்கப்படும்.
இந்தியாவின் மதிப்பு கூட்டப்பட்ட சில பொருட்களை வடகிழக்கு மாநில எல்லைகள் மூலம் வங்கதேசத்துக்குள் அனுமதிக்க அந்த நாடு சமீபத்தில் தடை விதித்தது. இதற்கு பதிலடியாக இந்தியா மேற்கண்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.