புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ உருவாக்கியுள்ள இஓஎஸ்-09 செயற்கைக் கோள் இன்று அதிகாலை 5.59 மணிக்கு பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.
விவசாயம், பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட தொலைஉணர்வு பயன்பாட்டுக்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் கார்டோசாட், ஸ்காட்சாட், ரிசாட் என பல்வேறு செயற்கைக் கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக இஸ்ரோ வடிவமைத்துள்ள இஓஎஸ்-09 (ரிசாட்-1பி) எனும் அதிநவீன ரேடார் செயற்கைக் கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் இன்று அதிகாலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
இதற்கான 22 மணிநேர கவுன்ட்-டவுன் நேற்று காலை 7.59 மணிக்கு தொடங்கியது. அதை தொடர்ந்து, எரிபொருள் நிரப்புதல், கண்காணிப்பு உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இஓஎஸ்-09 செயற்கைக் கோள் மொத்தம் 1,696 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள். இது பூமியில் இருந்து 534 கி.மீ. உயரம் கொண்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது. இதில் சி-பேண்ட் சிந்தடிக் அபெர்ச்சர் ரேடார் கருவி உள்ளது. இதன்மூலம் இரவு – பகல் என எந்த நேரத்திலும், அனைத்து பருவநிலைகளிலும் துல்லியமான படங்களை எடுக்கமுடியும். நாட்டின் எல்லை பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, விவசாயம், காடுகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தேவையான முக்கிய தரவுகளை இது வழங்கும். ஆயுள்காலம் முடிந்த ரிசாட்-1ஏ செயற்கைக் கோளுக்கு மாற்றாக இந்த செயற்கைக் கோள் அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.