பொன்னுக்கு வீங்கி பாதிப்பு அதிகரித்து வருவதால் தேசிய தடுப்பூசி அட்டவணையில் எம்எம்ஆர் மீஸல்ஸ், மம்ப்ஸ், ரூபெல்லா தடுப்பூசியை சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரிடையே பரவும் பொன்னுக்கு வீங்கி எனப்படும் மம்ப்ஸ் நோயானது பாரமைக்ஸோ வைரஸால் பரவி, காதுகள் மற்றும் தாடைக்கு இடையே பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. உமிழ்நீர் சுரப்பிகளில் அத்தகைய வீக்கம் உருவாவதால் கடுமையான வலி மற்றும் காய்ச்சலும், அதனுடன் தலைவலி, பசியின்மை, கன்னங்கள் வீங்குதல், சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளும் தென்படுகிறது. பொன்னுக்கு வீங்கி பாதித்தவர்களின் இருமல், தும்மல், சளி, உமிழ்நீர் திவலைகள் மூலம் மற்றவர்களுக்கு அந்நோய் பரவுகிறது. ஒரு வாரத்தில் இருந்து 16 நாள்களுக்குள் பாதிப்பு உடலுக்குள் ஊடுருவி அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. இதற்கென தனியாக தடுப்பு மருந்துகள் தேவையில்லை என்றாலும், நோய் தொற்றுக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்தி கொண்டால், பாதிப்பு சரியாகிறது.
தமிழகத்தில் கடந்த 2021-22-ம் ஆண்டும் 61 பேருக்கு மட்டுமே அந்நோய் பாதிப்பு ஏற்பட்டது. 2022-23-ம் ஆண்டு 129 பேருக்கு நோய் பாதிப்பு உறுதியானது. அடுத்த ஆண்டில் அந்த எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து 1,091 ஆக அதிகரித்தது. தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் எம்ஆர் எனப்படும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி வழங்கப்படுகிறது. அதேநேரம், எம்எம்ஆர் எனப்படும் தட்டம்மை மம்ப்ஸ் ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை. தடுப்பு மருந்துகளை காட்டிலும், நோய் எதிர்ப்பாற்றலே இந்த பாதிப்பை சரி செய்துவிடும் என்பதால் இதுவரை தடுப்பூசி வழங்கப்படாமல் இருந்தது. தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு பொன்னுக்கு வீங்கிக்கான தடுப்பூசியையும் அட்டவணையில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.