அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிலுவைத்தொகையுடன் அகவிலைப்படி உயர்வை மே மாத சம்பளத்தோடு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஜனவரி முதல் 2 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அகவிலைப்படி உயர்வு தொடர்பாக நிதித்துறை வெளியிட்ட அரசாணையில், “ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்” தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அகவிலைப்படி உயர்வு உத்தரவை செயல்படுத்தும் வகையில் அனைத்து சம்பளம் வழங்கும் அலுவலர்கள், கருவூலம் மற்றும் கணக்குத்துறை அதிகாரிகளுக்கு அத்துறையின் இயக்குநர் டி.சாருஸ்ரீ அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவைத்தொகை பட்டியலை மே மாதத்தின் ஊதிய பட்டியலுடன் இணைத்து அனுப்பிவிடலாம். அதை சம்பந்தப்பட்ட கருவூலம் மற்றும் கணக்குத்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு அகவிலைப்படி உயர்வு நிலுவைத்தொகையுடன் ஊதியம் வழங்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் 8 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்.