ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை திடீரென டெல்லி புறப்பட்டு சென்ற நிலையில், அவர் குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக ஆளுநர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நேற்று பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றத்துக்கு எழுப்பியுள்ளார். இந்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சூழலில், நேற்று காலை 7 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லி புறப்பட்டுச்சென்றார்.
அவருடன் ஆளுநரின் செயலர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரியும் டெல்லி சென்றனர். இது ஆளுநரின் வழக்கமான பயணம் என ராஜ்பவன் தரப்பில் கூறப்பட்டாலும், பிரதமர் அலுவலக அழைப்பின் பேரில் அவர் சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர் குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள் சிலரை சந்திக்க உள்ளதாகவும், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. பயணத்தை முடித்து வரும் வரும் 18-ம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார்.