புதுடெல்லி: ட்ரம்பின் சமீபத்திய கருத்துகளால் இந்திய அதிகாரிகள் விரக்தியடைந்திருக்கும் நிலையில், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அமைய உள்ளது குறித்து ட்ரம்ப் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது.
நீண்ட காலமாகவே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அறிவிக்கப்படாத வர்த்தகப் போர் நிலவி வருகிறது. இதனால், ஆப்பிள் நிறுவனம் சீனாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து, இந்தியாவில் அதிகரிக்க திட்டமிட்டிருந்தது. அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஐபோன்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய இருப்பதாக அந்த நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் கூறியிருந்தார்.
இந்நிலையில், தோஹாவில் நடந்த வர்த்தக நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், “ ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக்குடன் எனக்கு சிறிய பிரச்சினை உள்ளது. நான் உங்களை நன்றாக கவனித்துக் கொள்கிறேன். நீங்கள் 500 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு கொண்டு வந்துள்ளீர்கள். ஆனால், நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதாக கேள்விப்பட்டேன். நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதை விரும்பவில்லை. இந்தியாவில் அவர்களே அவர்களை கவனித்துகொள்வார்கள்.
இந்தியாவின் நலன் பற்றி நீங்கள் எண்ணினால், அங்கு தொழிற்சாலை அமைக்கலாம். உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. அங்கு பொருட்களை விற்பது கடினம்” என்றார். ஆனால், ஆப்பிள் நிறுவனம் இது குறித்து எதுவும் உடனடியாக பதிலளிக்கவில்லை.
இந்தியா, அமெரிக்கா பொருட்கள் மீது எந்த வரியும் போடமாட்டோம் என கூறியுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். ஆனால், இந்தியா அதுகுறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ட்ரம்பின் சமீபத்திய கருத்துகளால் இந்திய அதிகாரிகள் விரக்தியடைந்துள்ளனர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் குறித்த அவரது அறிவிப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ மோதலை நிறுத்த வர்த்தக தொடர்பை ஒரு கருவியாகப் பயன்படுத்தியதாக சொல்லிக்கொண்டது ஆகியவையும் இதில் அடங்கும்.