Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»‘கிங்’ கோலி… ‘இந்திய கிரிக்கெட்டின் சண்டைக் கோழி’யை மறக்க முடியுமா?!
    விளையாட்டு

    ‘கிங்’ கோலி… ‘இந்திய கிரிக்கெட்டின் சண்டைக் கோழி’யை மறக்க முடியுமா?!

    adminBy adminMay 14, 2025No Comments6 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘கிங்’ கோலி… ‘இந்திய கிரிக்கெட்டின் சண்டைக் கோழி’யை மறக்க முடியுமா?!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சாதனைகளை பலரும் போற்றி வரும் சூழலில், கிரிக்கெட் உடன் இணைந்த அவரது பர்சனல் பக்கங்களை சற்றே புரட்டுவோம்…

    ‘இந்திய கிரிக்கெட்டின் சண்டைக் கோழி’ என்று விராட் கோலியைச் சொல்லலாம். கடந்த காலங்களில் இந்திய அணியை வழிநடத்தி வந்தவர்கள் (கங்குலியைத் தவிர) சாந்த சொரூபியாகவே இருந்தார்கள். எதிரணி வீரர்கள் நம் வீரர்களை ‘ஸ்லெட்ஜிங்’ செய்து உசுப்பேற்றினாலும் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். ஆனால், “நம்மில் ஒருவரைச் சீண்டினாலும், ஒட்டுமொத்த எதிரணியையும் பதிலுக்குச் சீண்ட வேண்டும்” என்ற புதிய யுத்த முறையைக் கொண்டுவந்தவர் கோலி. கொஞ்சம் கங்குலி, கொஞ்சம் ரிக்கி பான்டிங் என்று சண்டைக்கார கேப்டன்களின் கலவையாக நின்றவர் விராட் கோலி. ஆனால், ‘தேவையான’ ஆக்ரோஷம் மட்டுமல்ல… அன்பும் நிரம்பிய உணர்வுபூர்வமான மனிதர்தான் இந்த கோலி.

    ஆசிரியருக்கு மரியாதை: 2013 மற்றும் 2014-ம் ஆண்டின் தொடக்கத்திலும் கோலியின் ராஜ்ஜியம் உச்சத்தில் இருந்தது. வெற்றி மீது வெற்றி தன்னைத் தேடிவந்த சமயத்தில், அதற்குக் காரணமான தனது முதல் குருநாதர் ராஜ்குமார் சர்மாவின் நினைப்பு அவருக்கு வந்தது. தனக்கு கிரிக்கெட்டின் அரிச்சுவடியைக் கற்றுத்தந்த ராஜ்குமார் சர்மாவுக்கு ஏதாவது குருதட்சிணை கொடுக்க விராட் கோலி விரும்பினார். அதற்காக 2014-ம் ஆண்டு ஆசிரியர் தினத்தைத் தேர்ந்தெடுத்தார். அன்றைய தினம், தான் டெல்லியில் இருக்க முடியாமல் இருந்த சூழ்நிலையிலும் தனது சார்பாக அண்ணன் விகாஸ் கோலியை பயிற்சியாளரின் வீட்டுக்கு அனுப்பினார்.

    ஆசிரியர் தினத்தன்று காலையில், விராட் கோலியின் அண்ணன் தன் வீட்டுக் கதவை தட்டியபோது ராஜ்குமார் சர்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன விஷயம்?” என்று ராஜ்குமார் கேட்க, விகாஸ் எதையும் சொல்லாமல், தன் கையில் இருந்த செல்போனை ராஜ்குமாரிடம் கொடுத்தார். செல்போனின் மறுமுனையில் இருந்த விராட் கோலி, “ஆசிரியர் தின வாழ்த்துகள் சார்…” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அவரது கையில் ஒரு சாவியைத் திணித்தார் விகாஸ் கோலி. அப்போதும் ராஜ்குமார் சர்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. இந்தச் சமயத்தில் ராஜ்குமார் சர்மாவை, அவரது வீட்டுக்கு வெளியே தள்ளிக்கொண்டு போனார் விகாஸ் கோலி. அங்கு புத்தம் புதிய ஸ்கோடா ராபிட் கார் நின்றுகொண்டு இருந்தது.

    “இந்த காரின் சாவியைத்தான் நான் உங்களுக்குக் கொடுத்தேன். கோலி இதை உங்களுக்கு பரிசாகக் கொடுக்குமாறு கூறியிருக்கிறார்” என்று விகாஸ் கோலி சொல்ல, ராஜ்குமார் சர்மாவின் கண்கள் நிறைந்தன. உயர உயரப் பறந்தாலும், தன்னை மறக்காமல் இருக்கும் சீடன் கோலியை மனதுக்குள் வாழ்த்தினார். இந்தச் சம்பவம் பற்றி குறிப்பிட்டுள்ள ராஜ்குமார் சர்மா, “கோலியின் பரிசைவிட, அவன் என்னை இன்னும் மறக்காமல் ஞாபகம் வைத்துள்ளான் என்பதுதான் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்தது” என்கிறார்.

    சரிவும் உயர்வும்: எப்படிப்பட்ட சிறந்த கிரிக்கெட் வீரருக்கும் ஒரு சரிவு இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சரிவுக் காலம் விராட் கோலிக்கும் ஏற்பட்டது. 2014-ம் ஆண்டில் மற்ற ஆண்டுகளைப்போல் அவரால் ஒரு கட்டத்தில் ரன்களைக் குவிக்க முடியவில்லை. அதிலும் அந்த ஆண்டில் இங்கிலாந்து தொடரில் மிக மோசமான முறையில் பேட்டிங் செய்தார். இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஆண்டர்சனின் நிரந்தர இரையாகவே மாறினார்.

    இந்த டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளில் ஆடிய விராட் கோலி மொத்தமாகவே 134 ரன்களைத்தான் எடுத்தார். இந்தத் தொடரில் அவர் எடுத்த சராசரி ரன்களே 13.40 தான். 1, 8, 25, 0, 39, 28, 0, 7, 6 என ஒவ்வொரு இன்னிங்ஸிலும் குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்தார். கோலியின் கதை அத்தோடு முடிந்தது என்று பலரும் பெட் கட்டினார்கள். அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று சிலர் குரல் எழுப்பினர். ஆனால் இம்முறையும் கேப்டன் தோனி, அவருக்குத் துணையாக இருந்தார். இதன் காரணமாக கோலியின் தலை தப்பியது.

    அணியிலிருந்து வெளியேற்றப்படாமல் காக்கப்பட்டாலும் தன்னால் ரன்களைக் குவிக்க முடியாதது கோலிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அதைச் சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டார். சச்சினிடம் ஆலோசனை கேட்டார். பேட்டிங் பயிற்சியின்போது பல மணிநேரம் அவருடன் இருந்து சில நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார் சச்சின். விராட் கோலியும் தன் பேட்டிங் பயிற்சிக்கான நேரத்தை இரட்டிப்பாக்கினார்.

    இங்கிலாந்தில் விட்டதற்கெல்லாம் சேர்த்து ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரில் வெளுத்து வாங்கினார். இத்தொடரில், 86.50 என்ற சராசரியுடன் தனது பேட்டிங் திறமையை நிரூபித்தார். பேட்டிங்கில் விராட் கோலி நடத்திய வேள்வி வெற்றியில் முடிய, கேப்டன் பதவி அவரைத் தேடிவந்தது. டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டார். இந்த நேரத்தில் கோலியின் வாழ்க்கையில் மற்றொரு வசந்தமும் வீசியது. அந்த வசந்தத்தின் பெயர் அனுஷ்கா சர்மா!

    ஒரு நல்ல காதலன்… கிரிக்கெட் போட்டிகளில், தான் சொதப்பினால், அதற்காக அனுஷ்காவை சில ரசிகர்கள் திட்டுவதை விராட் கோலியால் ஏற்க முடியவில்லை. இந்நிலையில் அனுஷ்கா ராசியில்லாதவர் என்றும், அவர் ஆட்டத்தைப் பார்க்க வரும் நாளில் விராட் கோலியால் ரன் எடுக்க முடிவதில்லை என்றும் சிலர் கூற பொங்கி எழுந்தார் விராட் கோலி. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் ஒரு பதிவையும் வெளியிட்டார்.

    “நான் ரன்கள் அடிக்காததையும், அனுஷ்கா கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வருவதையும் தொடர்புபடுத்தி விமர்சிப்பவர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன். அனுஷ்காவைப் பொறுத்தவரை என்னை உற்சாகப்படுத்தத்தான் வந்துள்ளார். நேர்மறையான எண்ணங்களைத்தான் அவர் எனக்கு கொடுத்துள்ளார். உங்கள் தங்கையையோ அல்லது காதலியையையோ இப்படி யாராவது விமர்சித்தால் அவர்கள் எப்படி கவலைப்படுவார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். அவருக்கு உரிய மரியாதையை கொடுங்கள்” என்று அந்தப் பதிவில் விராட் கோலி குறிப்பிட்டிருந்தார். கிர்க்கெட் வீரனாக மட்டுமின்றி, ஒரு நல்ல காதலனாகவும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை இதன்மூலம் கோலி நிரூபித்தார்.

    யாருடைய கண் பட்டதாலோ, 2016-ம் ஆண்டில் அவர்களின் காதலில் சிறிய விரிசல் விழுந்தது. ஜோடிப் புறாக்களாக சுற்றித் திரிந்த இருவரும், சில காலம் நேரில் சந்திப்பதைக்கூட தவித்தனர். இந்த காலகட்டத்தில் விராட் கோலி சமூக வலைதளங்களில், “என் இதயம் நொறுங்கிக் கிடக்கிறது” என்று பதிவிட்டார். மற்ற காதல்களைப் போல இந்தக் காதலையும் கோலி முறித்துக்கொண்டார் என்றுகூட சிலர் பேசிக்கொண்டனர். ஆனால் அந்தப் பிரிவு நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. அவர்களின் காதல் மீண்டும் துளிர்விட்டது.

    இந்தச் சூழலில் கோலி – அனுஷ்காவின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இத்தாலியில் உள்ள டஸ்கனி என்ற இடத்தில் டிசம்பர் 11-ம் தேதி, வெளியாட்கள் யாரும் இல்லாமல் உறவினர்களை மட்டும் வைத்து அனுஷ்காவைத் திருமணம் செய்துகொண்டார் கோலி. அவர் நினைத்திருந்தால் கிரிக்கெட் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாகத் திருமணம் செய்திருக்கலாம். ஆனால் தனது திருமணத்தைத் தனிப்பட்ட விஷயமாகக் கருதிய விராட் கோலி, நெருங்கிய உறவினர்களான 42 பேரை மட்டும் வைத்து திருமணத்தை முடித்துக்கொண்டார். அதன்பிறகு இந்தியாவில் நண்பர்களுக்காகவும், ரசிகர்களுக்காகவும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினார்.

    இந்தக் காலகட்டத்தில் காதலிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் விராட் கோலி பெற்ற வெற்றிகள், அவரது கிரிக்கெட் வாழ்க்கையிலும் தொடர்ந்தது. சர்வதேசப் போட்டிகளில் அவர் தொடர்ந்து ரன்களைக் குவித்தார். ஆரம்பத்தில் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக நியமிக்கப்பட்ட விராட் கோலி, பின்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். எந்த தோனியின் தலைமையில், விராட் கோலி நட்சத்திர வீரராக வளர்ந்தாரோ, அதே தோனிக்கு வெள்ளைப் பந்து கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக இருந்தார்.

    பெருமிதம் தந்த சிஷ்யன்: ஆனால் யாருடைய கண்பட்டதோ, கடந்த 2019-ம் ஆண்டில் வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டிக்குப் பின்னர், கோலியால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடிக்க முடியாமல் போனது. அதைப் பற்றி கோலி கவலைப்படாவிட்டாலும், ஆரம்ப காலத்தில் அவரது ஆட்டத்திறனைச் செழுமைப்படுத்திய பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா ரொம்பவே கவலைப்பட்டார்.

    கடந்த இங்கிலாந்து தொடரின்போது, தொலைபேசியில் விராட் கோலியுடன் பேசிய ராஜ்குமார் சர்மா, அதுகுறித்த தனது கவலையை வெளிப்படுத்தினார். ஆனால், விராட் கோலி அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மாறாக, இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி வெற்றிகளைக் குவிப்பது மகிழ்ச்சியளிப்பதாக அவரிடம் பெருமிதத்துடன் சொன்னார் கோலி. தன்னைவிட அணியின் வெற்றியைப் பெரிதாக நினைக்கும் தனது சிஷ்யன் குறித்து பெருமைப்பட்டுக்கொண்டார் ராஜ்குமார் சர்மா.

    அதேநேரத்தில், தனது பேட்டிங்கின் தரம் குறைந்துபோவதைப் பற்றியும் யோசிக்கத் தொடங்கினார் கோலி. இந்த நேரத்தில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகள் ஆகியவற்றில் தொடர்ந்து கேப்டன் பொறுப்பை ஏற்பது தனது பேட்டிங்கை பாதிக்கிறதோ என்று அவர் நினைத்தார். அதில் ஓரளவு உண்மையும் இருந்தது.

    சச்சின் காட்டிய வழியில்… – தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற மற்ற அணிகள் எல்லாம் டெஸ்ட் போட்டிக்கு ஒரு கேப்டன், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ஒரு கேப்டன் என்று பணிகளைப் பிரித்துக் கொடுக்க, இந்தியா மட்டும் விராட் கோலி மீது முழுச் சுமையையும் இறக்கி வைத்தது. இந்திய அணியை சர்வதேச அளவில் சுமந்தது போதாதென்று, ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியையும் சேர்த்து சுமந்தார். இப்படி சதா சர்வ காலமும் கேப்டன் பொறுப்பை ஏற்பதால், அணியைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார் விராட் கோலி. இதனால் தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த அவரால் முடியவில்லை.

    முன்பு சச்சின் டெண்டுல்கருக்கும் இதேபோன்ற நிலை ஏற்பட்டிருந்தது. 1996 முதல் 2000 வரை இந்திய அணிக்கு சச்சின் கேப்டனாக இருந்துள்ளார். ஆனால் இந்தக் காலகட்டத்தில், அவரது பேட்டிங் பாதிக்கப்பட, துணிச்சலாகக் கேப்டன் பதவியை உதறியிருக்கிறார் சச்சின். பேட்டிங்கில் சச்சினின் வாரிசாகக் கருதப்பட்ட கோலி, பதவியை உதறுவதிலும் சச்சினைப் பின்பற்ற திட்டமிட்டார். அதன் தொடர்ச்சியாக, டி20 போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாய் அறிவித்தார். அத்துடன் ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். தன்னை பேட்டிங்கில் மீண்டும் நிரூபித்துக் காட்டினார்.

    கோலியின் மறுபக்கம்: பொதுவாக கிரிக்கெட் வீரர்கள், தங்கள் பிற்கால வாழ்க்கைக்காக வேறு ஏதாவது தொழிலையும் செய்வார்கள். அந்த வகையில் கிரிக்கெட்டுக்கு அடுத்ததாக தனக்கு மிகவும் பிடித்த ஃபிட்னெஸ் சார்ந்த தொழில் மீது ஆர்வம் கொண்டவர் விராட் கோலி. ‘சிசெல்’ என்ற பெயரில் நாட்டில் பல்வேறு இடங்களில் உடற்பயிற்சிக் கூடங்களை நிறுவினார். அத்துடன் ‘ராங்’ (Wrogn) என்ற பெயரில் ஃபேஷன் துறையிலும் ஈடுபாட்டு காட்டினார்.

    விளையாட்டுத் துறை சார்ந்த தொழில்களிலும் ஆர்வம் செலுத்திவரும் விராட் கோலி, சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக்கில் ‘யுஏஇ ராயல்ஸ்’ அணியையும், புரோ ரெஸ்ட்லிங் லீகில் ‘பெங்களூரு யோதாஸ்’ அணியையும் வாங்கினார். ‘கோல்டன் டிராகன்’, ‘சாமுராய் வீரன்’ உள்ளிட்ட 4 உருவங்களைத் தன் உடலில் பச்சை குத்திவைத்துள்ளார் கோலி. இவை தனக்கு அதிர்ஷ்டத்தைத் தேடித் தரும் என்பது அவரது நம்பிக்கை.

    சைவத்துக்கு மாற்றிய காயம்: உணவு விஷயத்தில் சைவம்தான் கோலியின் தெரிவாக இருக்கிறது. இதுபற்றி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ள அவர், “ஒரு காலத்தில் நான் அசைவத்தை விரும்பிச் சாப்பிடுவேன். ஆனால், இப்போது சைவ உணவுக்கு மாறிவிட்டேன். 2018-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்தின்போது என் கழுத்து எலும்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் பக்கவிளைவாகக் கை சுண்டுவிரலில் மரப்புத்தன்மை ஏற்பட்டு பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது.

    இது தொடர்பாக மருத்துவர்களை அணுகியபோது, அவர்கள் எனக்குச் சிகிச்சை அளித்ததுடன், அசைவ உணவு சாப்பிடுவதை விட்டுவிட்டால், மேற்கொண்டு இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம் என்றும் பரிந்துரைத்தனர். அதனால் அசைவ உணவுகளை முடிந்தவரை தவிர்க்கிறேன். எப்போதாவது மட்டும் அசைவ உணவுகளைச் சாப்பிடுகிறேன்” என்று கூறியுள்ளார்.

    கிரிக்கெட்டில் முடிசூடா மன்னனாக இருந்து கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும், வீட்டில் வேலையாட்களை வைத்துக்கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் விராட் கோலி. வீட்டு வேலைகளை மனைவி அனுஷ்காவுடன் பகிர்ந்துகொள்வதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளாராம். அத்துடன் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை, கணவன் – மனைவி இருவரும் இணைந்தே உபசரிக்கின்றனர். இந்த எளிமையும் போற்றுதலுக்குரியது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    ‘என் ஊரில் ஆடுகளம் கூட இல்லை!’ – இந்திய கால்பந்து அணியில் அசத்தும் தமிழக வீராங்கனை பிரியதர்ஷினி

    June 30, 2025
    விளையாட்டு

    பயிற்சியாளர்களின் கைப்பாவையா ஷுப்மன் கில்? – ‘கேப்டன்சி’ ஒரு பார்வை

    June 30, 2025
    விளையாட்டு

    ‘இந்திய அணிக்கு ஃபீல்டிங் சரியில்லாதது பெரிய பிரச்சினை அல்ல’ – புதிர் போடும் கிரெக் சாப்பல்

    June 30, 2025
    விளையாட்டு

    சதம் விளாசி டூப்ளசி சாதனை: எம்ஐ நியூயார்க்கை வீழ்த்திய சூப்பர் கிங்ஸ் @ MLC 2025

    June 30, 2025
    விளையாட்டு

    ​விம்​பிள்​டன் டென்​னிஸ் போட்டி இன்று தொடக்​கம்!

    June 30, 2025
    விளையாட்டு

    திண்டுக்கல்லில் கால்பந்து வீரர்கள் தேர்வு!

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தந்தை பேச்சை கேட்காத மனோஜித் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன: கொல்கத்தா போலீஸ் தகவல்  
    • சென்னையில் 120 மின்சார பேருந்துகள் சேவை: ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. வரை இயங்கும்
    • 65 ஆண்டுக்கு பிறகு ஜூன் மாதத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியது: பூஜை செய்து வழிபட்ட சித்தராமையா
    • போதை தொடர்பான காட்சிகள் இல்லாத திரைப்படங்களே இல்லை: ஐகோர்ட் காட்டம்
    • ரோஸ்மேரி வாட்டர் Vs ரோஸ்மேரி எண்ணெய்: முடி வளர்ச்சிக்கு எது சிறந்தது?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.