சென்னை: “உங்கள் ஆட்சியில் பெண்கள் வெளியிலேயே வர முடியாத அவல நிலை இருப்பதையும், நாள்தோறும் பதியப்படும் போக்சோ வழக்குகளையும் பார்த்து நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பதிலளித்துள்ளார்.
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பை அடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த “சார்கள்” மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கூறியுள்ளதாவது: அந்த குற்றவாளி கூடாரத்தை கைது செய்தது எனது அரசு.
உங்களைப்போல திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது. வழக்கம்போல, உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கி கொண்டு வராதீர்கள்.
யார் வெட்கித் தலைகுனிய வேண்டும். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட உங்கள் அமைச்சர் மீதும், சென்னை துணை மேயர் மீதும் விசாரணை நடத்தாத நீங்கள்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும். யார் அந்த சார் என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லாமல் அந்த சாரை காப்பாற்றத் துடிக்கும் நீங்களே வெட்கித் தலைகுனிய வேண்டும்.
அண்ணாநகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்று, மூத்த வக்கீல்களை நியமிக்க மக்கள் வரிப்பணத்தை செலவழித்து, 10 வயது சிறுமிக்கும் அச்சிறுமியின் பெற்றோருக்கும் கிடைக்க வேண்டிய நீதிக்கு எதிராக வாதாடிய நீங்கள்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால், உங்கள் ஆட்சியில் பெண்கள் வெளியிலேயே வர முடியாத அவல நிலை இருப்பதையும், நாள்தோறும் பதியப்படும் போக்சோ வழக்குகளையும் பார்த்து வெட்கித் தலைகுனியுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.