சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 13) அன்று ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் ஏர்டெல் டெலிகாம் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது பதிவுகள் மூலம் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை மாலை தமிழகம் முழுவதும் பரவலாக ஏர்டெல் பயனர்கள் மொபைல் அழைப்புகளை மேற்கொள்ள முடியாமல் சிரமத்தை எதிர்கொண்டனர். இதோடு மொபைல் நெட்வொர்க் மற்றும் மொபைல் டேட்டாவும் பயன்படுத்த முடியாமல் சில பயனர்கள் தவித்தனர்.
பல்வேறு தளங்களின் பாதிப்பு குறித்து தகவல் தரும் டவுன் டிடெக்டர் தளத்தில், செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி வரை சுமார் 8,400-க்கும் மேற்பட்ட பேர் ஏர்டெல் சேவை பாதிப்பு குறித்து தெரிவித்திருந்தனர். சென்னை, மதுரை, கோவை, புதுச்சேரி என தமிழக டெலிகாம் சர்க்கிள் பகுதிகளில் உள்ள பயனர்கள் ஏர்டெல் சேவையை பயன்படுத்த முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 7 மணி முதல் ஏர்டெல் டெலிகாம் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இரவு 10 மணி வரையில் பெரும்பாலான இடங்களில் சேவை பாதிப்பு இருந்தது. தங்கள் நிறுவன சேவை பாதிக்கப்பட்டதை ஏர்டெல் நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதை சீர் செய்யும் பணியில் ஏர்டெல் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஏர்டெல் நிறுவனம் உள்ளது குறிப்பிடத்தக்கது.