இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தைகளில் இன்று எழுச்சி நிலவியது. ஒரே நாளில் சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் அளவுக்கு உயர்ந்தது கவனிக்கத்தக்கது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 2,975 புள்ளிகள் உயர்ந்து 82,429 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 916 புள்ளிகள் உயர்ந்து 24,924 புள்ளிகளில் நிலைகொண்டது.
கடந்த வாரத்தில், போர்ப் பதற்றம் காரணமாக மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளில் தொடர் வீழ்ச்சி நிலவியது. இப்போது, போர் நிறுத்தம் காரணமாக பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்தியப் பங்குச் சந்தைகளில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்து வருவது, இந்தியா – இங்கிலாந்து இடையிலான வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட காரணங்களாலும் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளன. இன்றைய வர்த்தகத்தில் பெரும்பாலான நிறுவனப் பங்குகளும் ஏற்றம் கண்டதும் கவனிக்கத்தக்கது.