‘கூலி’ மற்றும் ‘தக் லைஃப்’ படக்குழுவினரின் புதிய முயற்சியால் இந்தியில் பெரியளவில் ஓப்பனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னிந்திய படங்களின் ஓடிடி உரிமை விற்கப்படும்போது 4 வாரத்தில் ஓடிடியில் வெளியிடலாம் என்று ஒப்பந்தம் போட்டுக் கொள்வார்கள். அதே போல் சரியாக ஒரு மாத இடைவெளியில் ஓடிடி தளத்திலும் வெளியாகிவிடும். ஆனால், இந்தியில் அப்படியல்ல. ஓடிடியில் 8 வாரங்கள் கழித்து வெளியிட ஒப்பந்தம் போட்டிருந்தால் மட்டுமே மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் வெளியிட முடியும். இதனால் பல தென்னிந்திய படங்கள் சரியான வெளியீடு இல்லாமல் இந்தியில் தடுமாறி இருக்கின்றன.
இந்த சிக்கல் இல்லாமல், இந்தியில் பிரம்மாண்டமாக வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது ‘கூலி’ மற்றும் ‘தக் லைஃப்’ படக்குழுவினர். தங்களுடைய படங்களை 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறார்கள். இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் பட்சத்தில், இந்தியில் பிரம்மாண்டமாக வெளியாகும். முதல் நாள் வசூலும் பெரியளவில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
‘கூலி’ படத்தில் ரஜினியுடன் ஆமிர்கான் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே போல் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. இவர்கள் அனைவருக்குமே இந்தியிலும் பெரியளவில் மார்க்கெட் இருப்பதால், 8 வாரங்கள் கழித்து ஓடிடி வெளியீடு திட்டத்தை கையில் எடுத்துள்ளது படக்குழு. இது தொடர்பான இறுதியான முடிவு இன்னும் சில தினங்களில் தெரியவரும்.