முன்னணி நடிகர்களின் படங்களை தயாரிப்பீர்களா என்ற கேள்விக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார். மே 9-ம் தேதி, சமந்தா தயாரிப்பாளராக அறிமுகமாகும் ‘சுபம்’ வெளியாகவுள்ளது.
இதனை பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்தி வருகிறார் சமந்தா. தனது தயாரிப்பில் அனைவருக்கும் சமமான ஊதியமே வழங்கப்படும் என்று முன்பு அளித்துள்ள பேட்டியில் சமந்தா கூறியிருந்தார்.
தற்போது முன்னணி நாயகர்களின் படங்களை தயாரிப்பீர்களா என்ற கேள்விக்கு சமந்தா, “மாட்டேன் என்று ஒருபோதும் சொல்லமாட்டேன். எனது தயாரிப்பில் ஒவ்வொரு அம்சத்திலும் கவனமாக இருக்கவே விரும்புகிறேன். சமமான திறமை, ஊதியம் மற்றும் அனுபவத்தையே நம்புகிறேன். எல்லோருமே புதுமுகங்கள் என்பதால் இப்படத்துக்கு எளிதாக இருந்தது.
வெவ்வேறு வகை படங்களுக்கு வெவ்வேறு தேவைகள் இருப்பதை அறிவேன். முடிந்தவரை சமமான திறமை, சமமான ஊதியம் மற்றும் சமமான அனுபவம் இருப்பதை உறுதி செய்யவே விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் சமந்தா.