சென்னை: பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் ராணுவ நடவடிக்கை மூலம் தாக்குதல் நடத்தியது இந்தியா. இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “போராளியின் சண்டை தொடங்கியது. பணி நிறைவேறும் வரை இனி ஓய்வில்லை. ஒட்டுமொத்த தேசமும் உங்களுடன் உள்ளது. ஜெய்ஹிந்த்” என குறிப்பிட்டுள்ளார். இதில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சகத்தை அவர் டேக் செய்துள்ளார். இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பலர் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆபரேஷன் சிந்தூர்: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.