‘ரெட்ரோ’வை தொடர்ந்து தனது அடுத்த படத்தின் அப்டேட் குறித்து தகவல் பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, நாசர், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ரெட்ரோ’. இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. மேலும், எதிர்பார்த்த வசூலையும் இப்படம் அடையவில்லை. ஆனால், மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் மட்டும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனிடையே, ‘ரெட்ரோ’ படம் குறித்து அளித்த பேட்டியில் தனது அடுத்த படம் குறித்து பேசியிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். அதில், “அடுத்த படம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்துக்குப் பின் ஒரு சின்ன படமொன்று பண்ணலாம் என தீர்மானித்தேன். அதற்கான கதை தயாராக இருக்கிறது. அதனை முடித்து திரைப்பட விழாக்களுக்கு எல்லாம் அனுப்பிவிட்டு, ஓர் ஆண்டு கழித்து திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன்.
அந்தப் படத்தின் வசூல் நிலவரம் என்ன என்பது எல்லாம் மனதில் வைக்காமல் எடுக்க திட்டமிட்டு இருக்கிறேன். சின்ன பட்ஜெட், புதுமுக நடிகர் என முடிவு செய்திருக்கிறேன். அந்தக் கதையை பல வெர்ஷன்கள் எழுதி வைத்துள்ளேன். அடுத்து அப்படத்தை பண்ணலாம் என திட்டமிட்டு இருக்கிறேன். ஆனால் இன்னும் முடிவு செய்யவில்லை” என்று கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.