புதுடெல்லி: முகலாயர் ஆட்சி காலத்தில் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட டெல்லி செங்கோட்டைக்கு தான்தான் வரிசு என உரிமை கோரி பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு அருகே உள்ள ஹவுராவில் வசித்து வருபவர் சுல்தானா பேகம். பகதூர் ஷா ஜாபர் II -ம் பரம்பரையின் வாரிசு எனக்கூறிக் கொள்ளும் இவர் டெல்லியில் உள்ள நினைவுச் சின்னமான செங்கோட்டைக்கு உரிமை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது: ஏன் டெல்லி செங்கோட்டையை மட்டும் கேட்கிறீர்கள்? பதேபூர் சிக்ரி (16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அக்பரின் ஆட்சிக் காலத்தில் முகலாயப் பேரரசின் தலைநகரம்), தாஜ்மஹால் ( 17-ம் நூற்றாண்டில் ஷாஜஹானால் கட்டப்பட்டது) எல்லாம் உங்களுக்கு வேண்டாமா? .
அவையெல்லாம் வேண்டும் என்று வாதிட விரும்புகிறீர்களா?. இந்த மனு தவறான நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 2021-ம் ஆண்டு சுல்தானா பேகம், வாரிசுரிமை அடிப்படையில் டெல்லி செங்கோட்டையை தன்னிடம் ஒப்படைக்க கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்கெனவே டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இது மிகவும் தாமதமான நடவடிக்கை எனக் கூறி சுல்தானா பேகத்தின் மனு நீதிமன்றத்தால் மீண்டுமொருமுறை நிராகரிப்புக்கு உள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.