லீட்ஸ்: இங்கிலாந்து அணி உடனான லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 300+ ரன்கள் என்ற முன்னிலையை பெற்றுள்ளது இந்திய அணி. இதற்கு கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் இடையிலான அபார கூட்டணி முக்கிய காரணமாக அமைந்தது. இருவரும் அடுத்தடுத்து சதம் கடந்து அசத்தினர்.
இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து, இந்தியா இந்த போட்டியில் முதலில் பேட் செய்தது. இரு அணிகளும் முதல் இன்னிங்ஸில் முறையே 471 (இந்தியா) மற்றும் 465 (இங்கிலாந்து) ரன்கள் எடுத்தான்.
6 ரன்கள் முன்னிலை உடன் இரண்டாவது இன்னிங்ஸை இந்தியா தொடங்கியது. 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்தது. இன்று (ஜூன் 23) நான்காம் ஆட்டம் தொடங்கியது. இந்த நாளில் இங்கிலாந்து தரப்பில் வீசப்பட்ட 7-வது பந்தில் இந்திய கேப்டன் ஷுப்மன் கில் ஆட்டம் இழந்தார். பிரைடன் கார்ஸ் வீசிய பந்து அவரது பேட்டில் பட்டு இன்ஸைட் எட்ஜ் ஆகி ஸ்டம்புகளை தகர்த்தது. தொடர்ந்து ரிஷப் பந்த் களத்துக்கு வந்தார். அவருடன் இணைந்து கே.எல்.ராகுல் பொறுப்பாக ஆடினார்.
முதல் செஷனில் நிதானம்: 4-ம் நாள் ஆட்டத்தின் முதல் செஷனில் இந்தியா 24.1 ஓவர்கள் ஆடி ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியின் பவுலர்கள் தங்களது லைன் மற்றும் லெந்த் சார்ந்து துல்லியமாக இருந்தனர். ஆடுகள சூழலும் அவர்களுக்கு உதவியது. இந்த செஷனில் இந்தியாவின் ரன் ரேட் வெறும் 2.60 என இருந்தது.
அதிரடி மோடில் ரிஷப் பந்த்: உணவு நேர முடிவுக்கு பிறகு தொடங்கிய இரண்டாவது செஷனில் பந்த் தனது ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். 83 பந்துகளில் அவர் அரை சதம் கடந்தார். மறுமுனையில் 202 பந்துகளை எதிர்கொண்டு சதம் விளாசினார் கே.எல்.ராகுல்.
அரை சதம் கடந்த பிறகு வெறும் 21 பந்துகளில் 90 ரன்களை எட்டினர் பந்த். அதன் பிறகு 100 ரன்களை கடக்க கொஞ்சம் டைம் எடுத்துக் கொண்டார். 130 பந்துகளில் பந்த் சதம் கடந்தார். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் அவர் சதம் எடுத்திருந்தார். 140 பந்துகளில் 118 ரன்கள் எடுத்த நிலையில் பஷீர் சூழலில் தனது விக்கெட்டை இழந்தார் பந்த். 15 பவுண்டரி, 3 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். அதன் மூலம் கே.எல்.ராகுல் மற்றும் பந்த் இடையிலான 195 ரன்கள் கூட்டணி முடிவுக்கு வந்தது. ராகுல் 137 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 86 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 335 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் ஆட்டத்தில் 340+ ரன்கள் முன்னிலையில் உள்ளது இந்தியா. கருண் நாயர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.