புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜிஎஸ்டியை எளிமைப்படுத்தும் வகையில் 12, 28 ஆகிய சதவீதங்களை நீக்கிவிட்டு 5, 18 ஆகிய இரு சதவீத நடைமுறையைப் பின்பற்ற முடிவு செய்யப்பட்டது.
அதேவேளையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் மற்றும் கேசினோ, ரேஸ் கிளப்புகளுக்கு உள்ளீட்டு வரியுடன் (ஐடிசி) 40 சதவீத ஜிஎஸ்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி இருந்தது.
கடந்த சீசனில் சில நகரங்களில் ஐபிஎல் டிக்கெட்டின் அடிப்படை விலை ரூ.500 ஆக இருந்த நிலையில் 28 சதவீத ஜிஎஸ்டியின் காரணமாக ரூ.640 செலுத்த வேண்டி இருந்தது. தற்போது இது 40 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளதால் இனிமேல் ரூ.700 செலுத்த வேண்டி வரும். ஏனெனில் ஐபிஎல் டிக்கெட்டுகள் ‘ஆடம்பரப் பொருட்கள்’ பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளையில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகளுக்கான டிக்கெட் விலை ரூ.500-க்கு கீழ் இருந்தால் அவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் டிக்கெட்டின் விலை ரூ.500-க்கு மேல் இருந்தால் 18 சதவீத ஜிஎஸ்டி இருக்கும்.