லண்டன்: இந்தியாவுக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தும், பர்மிங்ஹாமில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 387 ரன்களும், இந்தியா 387 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன. இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 4-ம் நாள் ஆட்டத்தை பென் டக்கெட் 0, ஜாக் கிராவ்லி 2 ரன்களுடன் தொடங்கினர். நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த பென் டக்கெட்டை, முகமது சிராஜ் வீழ்த்தினார். அவர் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து ஆலி போப் களம்புகுந்தார். ஆனால் அவரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 17 பந்துகளைச் சந்தித்த நிலையில் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ஆலி போப், சிராஜ் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
22 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாக் கிராவ்லி, ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து களத்துக்கு வந்த ஹாரி புரூக் அதிரடியாக விளையாடினார். அவர் 19 பந்துகளில் 23 ரன்கள் (4 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) சேர்த்த நிலையில் அவர் பெவிலியன் திரும்பினார்.
அதன் பிறகு 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸும், ஜோ ரூட்டும் நிதானமாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 17, பென் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் எடுத்திருந்தனர்.
உணவு இடைவேளைக்குப் பின்னர் பென் ஸ்டோக்ஸ், ரூட் ஜோடியைப் பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் செய்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இறுதியில் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஜோ ரூட் ஆட்டமிழந்தார். 96 பந்துகளைச் சந்தித்து இந்த ரன்களை ரூட் எடுத்திருந்தார்.
அதைத் தொடர்ந்து வந்த விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்தையும், போல்டாக்கி திருப்பி அனுப்பினார் வாஷிங்டன் சுந்தர். அவர் 14 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின்னர் இங்கிலாந்து அணியின் விக்கெட்கள் வரிசையாக வீழ்ந்தன.
பென் ஸ்டோக்ஸ் 33, கிறிஸ் வோக்ஸ் 10, பிரைடன் கார்ஸ் 1, ஷோயிப் பஷீர் 2 ரன்களில் வீழ்ந்தனர். ஆர்ச்சர் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
62.1 ஓவர்களில் 192 ரன்களுக்கு இங்கிலாந்தின் 2-வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4, பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா 2, நிதிஷ் ரெட்டி, ஆகாஷ் தீப் ஆகியோர் ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது.
இந்தியா 2-வது இன்னிங்ஸ்: நான்காம் நாள் ஆட்ட முடிவில் 17.4 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் எடுத்தது இந்திய அணி. ஜெய்ஸ்வால் 0, கருண் நாயர் 14, கேப்டன் ஷுப்மன் கில் 6, நைட் வாட்ச்மேனாக வந்த ஆகாஷ் தீப் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கே.எல்.ராகுல் 33 ரன்கள் உடன் களத்தில் உள்ளார்.
கடைசி நாளில் என்ன நடக்கும்? – இந்த போட்டியின் கடைசி நாளான இன்று இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 135 ரன்கள் தேவை. இந்தியாவின் வசம் உள்ள 6 விக்கெட்டுகளை இங்கிலாந்து கைப்பற்றினால் அந்த அணி வெற்றி பெறும். இதனால் கடைசி நாளில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.