2007 உலகக் கோப்பை டி20 தோனி தலைமை அணியுடன் இப்போது இங்கிலாந்து சென்றுள்ள ஷுப்மன் கில் தலைமை இந்திய அணியை முன்னாள் தமிழக வீரர் டபிள்யூ.வி.ராமன் ஒப்பிட்டுள்ளார்.
தோனி உலகக் கோப்பையை வென்றார். அது போல் கில் வெல்வார் என்ற தோரணையில் ராமன் இந்த ஒப்பீட்டைச் செய்யவில்லை. அப்போது தோனி அணியின் மேல் எந்த ஓர் எதிர்பார்ப்பும் இல்லை. அதுபோலவே கோலி, ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே உள்ளிட்ட ஜாம்பவான்கள் இல்லாத இந்த இந்திய டெஸ்ட் அணி மீது அதிக எதிர்பார்ப்பில்லாமல் இருப்பதால் வீரர்களுக்கு அழுத்தம் இல்லாமல் ஆடுவது எளிது. இது இந்திய அணிக்குச் சாதகம் என்கிறார் ராமன்.
2007-லும் இப்படித்தான் இந்திய அணி மாறும் கட்டத்தில் இருந்தது, இந்த இந்திய அணியும் மாற்றத்தில் உள்ளது. இந்நிலையில் டபிள்யூ.வி.ராமன் கூறியது: “இந்த இந்திய அணியைப் பொறுத்தவரையில் இங்கிலாந்தில் எப்படி ஆடப்போகிறதோ என்ற அச்சம் இருந்தாலும் 2007-ல் டி20 உலகக் கோப்பையின் போது தோனி அணி இருந்த அதே நிலையில்தான் உள்ளது என்று கூற முடியும்.
அன்றும் எதிர்பார்ப்பு என்பதில்லை. இன்றும் இந்த அணியின் மீது எதிர்பார்ப்பின் அழுத்தம் இல்லை. இது கில் அணிக்குச் சாதகமே. இங்குதான் இந்திய அணி சில ஆச்சரியங்களை நிகழ்த்தலாம். இங்கிலாந்தில் நாம் பல டெஸ்ட் தொடர்களை வெல்லவில்லை என்றாலும் நாம் சில பல ஆச்சரியங்களை நிகழ்த்த முடியும். 1971-ல் பகவத் சந்திரசேகரின் ஸ்பின் பவுலிங் அஜித் வடேகரின் கேப்டன்சியில் இந்தியா தொடரை வெல்லவில்லையா? அதேபோல் இப்போதும் ஆச்சரியங்களை இந்த அணி நிகழ்த்தலாம்” என்கிறார் டபிள்யூ.வி.ராமன்.
இங்கிலாந்தில் தொடரை வெல்ல பும்ராவின் பந்துவீச்சு மிக மிக முக்கியம். ஆனால் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தகவல்களின்படி பும்ரா அங்கு 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டும்தான் ஆடுவார் போல் தெரிகிறது. அதேபோல் குல்தீப் யாதவ்வை பெயருக்கு அழைத்துச் சென்று வாய்ப்புக் கொடுக்காமல் செய்யக் கூடாது, இங்கிலாந்து அணிக்கு அவர் ரக புதிர் பந்து வீச்சு எப்போதுமே சிக்கல்தான். பதற்றமடைந்து அடிக்கப் போய் ஆட்டமிழக்க வாய்ப்பு அதிகம்.
கம்பீர் – கில் கையில் இருப்பது அணித் தேர்வு என்னும் ஆயுதம். இதில் சொதப்பினால் களத்தில் கில்லும் சொதப்பி விடுவார். எனவே களமிறங்கும் முன் திட்டமிடல்தான் தொடரைத் தீர்மானிக்கும் என்பதில் இருவேறு கருத்தில்லை.