லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி நிதானமாக விளையாடி 364 ரன்கள் சேர்த்தது. கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் சதம் விளாசினர்.
லீட்ஸில் உள்ள ஹெட்டிங்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களும், இங்கிலாந்து அணி 465 ரன்களும் குவித்தன. 6 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 23.5 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்தது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4, சாய் சுதர்சன் 30 ரன்களில் ஆட்டமிழந்தனர். கே.எல்.ராகுல் 47, ஷுப்மன் கில் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. ஷுப்மன் கில் 8 ரன்கள் எடுத்த நிலையில் பிரைடன் கார்ஸ் பந்தில் போல்டானார். பிரைடன் கார்ஸ் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசிய பந்தை ஷுப்மன் கில் கட் செய்ய முயன்றார். ஆனால் பந்து மட்டை உள்விளிம்பில் பட்டு ஸ்டெம்பை பதம் பார்த்தது.
இதன் பின்னர் களமிறங்கிய ரிஷப் பந்த், கே.எல்.ராகுலுடன் இணைந்து நிதானமாக விளையாடி பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 48 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 72, ரிஷப் பந்த் 31 ரன்களுடன் களத்தில் இருந்தனர். மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் ஆட்டம் தொடர்ந்த நிலையில் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடினார். ஜோஷ் டங்க் வீசிய51 மற்றும் 57-வது ஓவரில் தலா 2 பவுண்டரிகள் விரட்டிய ரிஷப் பந்த், ஷோயிப் பஷிர் வீசிய 58-வது ஓவரில் மிட் ஆன் திசையில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
நிதானமாக விளையாடி கே.எல்.ராகுல் 202 பந்துகளில், 13 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். சர்வதேச டெஸ்டில் இது அவரது 9-வது சதமாக அமைந்தது. மறுமுனையில் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்ட ரிஷப் பந்த் 130 பந்துகளில், 2 சிக்ஸர்கள் 13 பவுண்டரிகளுடன் தனது 7-வது சதத்தை விளாசினார். ஜோ ரூட் வீசிய 71-வது ஓவரில் ரிஷப் பந்த் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி மிரட்டினார். அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் 140 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 118 ரன்கள் எடுத்த நிலையில் ஷோயிப் பஷிர் பந்தை லாங்ஆன் திசையில் விளாசிய போது ஸாக் கிராவ்லியிடம் கேட்ச் ஆனது.
4-வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் ஜோடி 195 ரன்கள் குவித்தது. இதையடுத்து கருண் நாயர் களமிறங்கினார். சிறப்பாக விளையாடி வந்த கே.எல்.ராகுல் 247 பந்துகளில் 18 பவுண்டரிகளுடன் 137 ரன்கள் எடுத்த நிலையில் பிரைடன் கார்ஸ் பந்தில் போல்டானார். கருண் நாயர் 54 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் அவரிடமே பிடிகொடுத்து வெளியேறினார். 96 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இந்திய அணி 364 ரன்கள் குவித்தது.
2 சதம் விளாசிய முதல் விக்கெட் கீப்பர்: லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் விளாசிய ரிஷப் பந்த் 2-வது இன்னிங்ஸில் 118 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸிலும் சதம் விளாசிய முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அதிக ரன்கள் குவித்த பிரதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் ரிஷப் பந்த் (252 ரன்கள்) படைத்தார். இதற்கு முன்னர் 1998-ம் ஆண்டு ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்றடெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் அலெக்
ஸ்டீவர்ட் 204 ரன்கள் (40, 164) சேர்த்ததே சாதனையாக இருந்தது. இதை தற்போது முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார் ரிஷப் பந்த்.
ஒரே போட்டியில் 5 சதங்கள்: இங்கிலாந்து அணிக்கு எதிரான லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தரப்பில் இருந்து 5 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோர் சதம் அடித்திருந்தனர். 2-வது இன்னிங்ஸில் கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரும் சதம் விளாசி உள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பில் 5 சதங்கள் அடிக்கப்பட்டது இதுவே முதன்முறை.
தொடர்ச்சியாக அசத்தல்: இங்கிலாந்து மண்ணில் கடைசியாக விளையாடிய 5 இன்னிங்ஸில் ரிஷப் பந்த் முறையே 50, 146, 57, 134, 118 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் தொடர்ச்சியாக 5 முறை 50 ரன்களுக்கு மேல் குவித்த வெளிநாட்டு வீரர்களின் பட்டியலில் 6-வது பேட்ஸ்மேனாக இணைந்துள்ளார் ரிஷப் பந்த். இதற்கு முன்னர் டான் பிராட்மேன், ஹன்சி குரோனி, சந்தர்பால், சங்கக்கரா, மிட்செல் ஆகியோரும் தொடர்ச்சியாக 5 முறை 50 ரன்களுக்கு விளாசி இருந்தனர். இந்த பட்டியலில் ஆஸ்ரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ச்சியாக 7 முறை 50 ரன்களுக்கு மேல் குவித்து முதலிடத்தில் உள்ளார்.
2 சதம் அடித்த 2-வது விக்கெட் கீப்பர்: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய 2-வது பிரதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார் ரிஷப் பந்த். இங்கிலாந்து அணிக்கு எதிரான லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் அவர், முதல் இன்னிங்ஸில் 134 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 118 ரன்களும் விளாசினார். இந்த வகையில் இதற்கு முன்னர் 2001-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹராரேவில் நடைபெற்ற டெஸ்டில் ஜிம்பாப்வேயின் ஆண்டி ஃபிளவர் முதல் இன்னிங்ஸில் 142 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 199* ரன்களும் விளாசியிருந்தார்.
தப்பித்த ராகுல், ரிஷப் பந்த்: கே.எல்.ராகுல் 54 ரன்களில் இருந்தபோது கல்லி திசையில் கொடுத்த கேட்ச்சை ஹாரிபுரூக் தவறவிட்டார். இந்த வாய்ப்பை கே.எல்.ராகுல் சரியாக பயன்படுத்திக் கொண்டு சதம் விளாசினார். இதேபோன்று ரிஷப் பந்த் 75 ரன்களில் இருந்த போது ஷோயிப் பஷிர் பந்தை எக்ஸ்டிரா கவர் திசையில் விளாசிய போது பென் ஸ்டோக்ஸ் டைவ் செய்து பிடிக்க முயன்றார். ஆனால் பந்து அவரது கையில் இருந்து நழுவியது.