பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கூறும்போது, “முதன்முறையாக நாங்கள் போதுமான அளவில் ரன்கள் சேர்த்தார். ஆனால் இது சராசரிக்கு சற்று குறைவான ஸ்கோர் என்றே கருதுகிறேன். இன்னும் கூடுதலாக ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பீல்டிங்கில் கேட்ச்களை நாங்கள் எடுத்திருக்க வேண்டும்.
பேட்டிங்கில் டெவால்ட் பிரேவிஸ், சேம் கரண் ஆகியோர் அமைத்த பார்ட்னர்ஷிப் அற்புதமானது. கடைசி ஓவரில் 4 பந்துகளை நாங்கள் விளையாடாமல் விட்டுவிட்டோம். 19-வது ஓவரில் 4 பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர். நெருக்கமான ஆட்டங்களில் இந்த 8 பந்துகளும் மிகவும் முக்கியமானது.
சேம் கரண் போராடக்கூடிய வீரர். இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவர் எப்போது களமிறங்கினாலும் பங்களிக்க விரும்புகிறார். துரதிர்ஷ்டவசமாக இதுவரை, நாங்கள் அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்க முயன்ற போதெல்லாம், ஆடுகளம் மெதுவாக இருந்தது. இதனால் அவர், சிரமப்பட்டார்.
ஆனால் இந்த போட்டிக்கான ஆடுகளம் இந்த சீசனில் சொந்த மண்ணில் எங்களுக்கு கிடைத்த சிறந்த ஒன்றாகும். அதனால்தான் இன்னும் 15 ரன்கள் தேவை என்று நினைத்தேன். மிடில் ஆர்டரில் டெவால்ட் பிரேவிஸ் உத்வேகம் வழங்குகிறார். சிறந்த பீல்டரான அவர், நல்ல பந்துகளை பவுண்டரிகளுக்கு அடிக்க முடியும். பிரேவிஸ் விளையாடும் விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் சிஎஸ்கேவுக்கு சொத்தாக இருக்க முடியும். இவ்வாறு தோனி கூறினார்.