ஹாங் காங்: ஹாங் காங் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் தோல்வி அடைந்தார். அதேவேளையில் ஆடவர் பிரிவில் ஹெச்.எஸ்.பிரனாய், லக்ஷயா சென் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
ஹாங் காங்கில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் லின் கிறிஸ்டோபர்சனுடன் மோதினார். இதில் சிந்து 21-15, 16-21, 19-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 34-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய் 21-17, 21-14 என்ற நேர் செட் கணக்கில் 14-ம் நிலை வீரரான சீனாவின் லூ குவாங் ஸுவையும், 20-ம் நிலை வீரரான லக்ஷயா சென் 22-20, 16-21, 21-15 என்ற செட் கணக்கில் 19-ம் நிலை வீரரான சீன தைபேவின் வாங் ஸு வெய்-யையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.