லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ஷுப்மன் கில் 4-வது பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என துணை கேப்டன் ரிஷப் பந்த் கூறியுள்ளார்.
நாளை லீட்ஸ் மைதானத்தில் இந்தப் போட்டி தொடங்க உள்ளது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. ரோஹித்தும், கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவர்கள் இருவரும் இல்லாமல் இந்திய அணி விளையாட உள்ள முதல் டெஸ்ட் போட்டி இது.
இந்நிலையில், இந்தத் தொடரில் முதல் போட்டி குறித்து ரிஷப் பந்த் கூறும்போது, “அணியின் பேட்டிங் வரிசையில் மூன்றாவது பேட்ஸ்மேனாக யார் களமிறங்குவது என்ற விவாதம் இன்னும் நீடிக்கிறது. ஆனால், 4 மற்றும் 5-வது இடத்தில் விளையாடுவது யார் என்பது உறுதியாகி உள்ளது. ஷுப்மன் கில் 4-வது இடத்திலும், நான் 5-வது இடத்திலும் விளையாட உள்ளோம். மற்றவை குறித்து கலந்தாலோசித்து வருகிறோம்.
எனக்கும், ஷுப்மன் கில்லுக்கும் இடையே ஆழமான புரிதல் உள்ளது. அதற்கு காரணம் எங்களது நட்பு. நிச்சயம் அது களத்தில் சிறந்த முடிவை எடுக்க உதவும்” என்றார்.
4-வது பேட்ஸ்மேனாக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,564 ரன்களை எடுத்துள்ளார் கோலி. அந்த இடத்தில்தான் கில் விளையாடுகிறார். இது அவரது பொறுப்புகளை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.