லீட்ஸ்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் இன்று பிற்பகலில் தொடங்குகிறது.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் போட்டி இன்று (20-ம் தேதி) ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. 45 நாட்கள் கொண்ட இந்த சுற்றுப்பயணம் கேப்டனாக ஷுப்மன் கில்லுக்கு கடும் சவால்களை அளிக்கக்கூடும்.
ஏனெனில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்ற பின்னர் இந்திய அணி எதிர்கொள்ளும் முதல் டெஸ்ட் தொடராக இங்கிலாந்து பயணம் அமைந்துள்ளது. மேலும் 2025-2027-ம் ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்தியாவுக்கு இது முதல் டெஸ்ட் தொடராகவும் உள்ளது. 25 வயதான ஷுப்மன் கில் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி பெரிய அளவிலான மாற்றத்தை நோக்கி பயணிக்க உள்ளது.
ஷுப்மன் கில் இந்திய அணியின் 37-வது டெஸ்ட் கேப்டன் ஆவார். கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் இந்தத் தொடர் அவருக்கு பல்வேறு கடினமான சவால்களை அளிக்க காத்திருக்கிறது. தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன், கே.எல்.ராகுல் களமிறங்கக்கூடும். தற்போதைய அணியில் கே.எல்.ராகுல் மட்டுமே அனுபவம் வாய்ந்த வீரராக உள்ளார். அவர், 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,257 ரன்கள் சேர்த்துள்ளார். கடந்த சுற்றுப்பயணத்தில் 39.37 சராசரியுடன் ஒரு சதம், ஒரு அரை சதம் உட்பட 315 ரன்கள் சேர்த்திருந்தார்.
3-வது வீரராக அநேகமாக சாய் சுதர்சன் அறிமுகமாகக்கூடும். 4-வது இடத்தில் ஷுப்மன் கில், 5-வது இடத்தில் ரிஷப் பந்த் களமிறங்குவது உறுதியாகி உள்ளது. 6-வது இடத்தில் அபிமன்யூ ஈஸ்வரன் அல்லது கருண் நாயர் களமிறங்கக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதைத் தொடர்ந்து ஆல்ரவுண்டர் வரிசையில் நித்திஷ் குமார் ரெட்டி அல்லது ஷர்துல் தாக்குர் களமிறங்கக்கூடும். 8-வது இடத்தில் ரவீந்திர ஜடேஜா இடம் பெறுவார். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோருடன் பிரசித் கிருஷ்ணா அல்லது அர்ஷ்தீப் சிங் களமிறங்கக்கூடும்.
இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பயிற்சியாளர் மெக்கலம் ஆகியோரது கூட்டணியில் கடந்த சில வருடங்களாக பாஸ்பால் (ஆக்ரோஷ பேட்டிங்) அணுகுமுறையை டெஸ்ட் போட்டியில் கடைபிடித்து வருகிறது.இந்த அணுகுமுறை கடந்த 2023-24-ம் ஆண்டு இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு கைகொடுக்கவில்லை.
அப்போது நடைபெற்ற தொடரை இங்கிலாந்து அணி 1-4 என்ற கணக்கில் இழந்திருந்தது. இந்த தோல்விகளுக்கு சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்க ஆயத்தமாகி உள்ளது. முதல் டெஸ்ட் போட்டிக்கான 11 வீரர்கள் கொண்ட அணியை இங்கிலாந்து அணி நேற்று முன்தினமே அறிவித்துவிட்டது. இதில் 8-வது வரிசை வரை பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றுள்ளனர். தொடக்க வீரர்களாக ஸாக் கிராவ்லி, பென் டெக்கெட் களமிறங்க உள்ளனர். 3-வது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஆலி போப் பலம் சேர்க்கக்கூடும்.
36 சதங்களுடன் 13 ஆயிரம் ரன்கள் வேட்டையாடி உள்ள அனுபவம் வாய்ந்த சீனியர் பேட்ஸ்மேனான ஜோ ரூட் 4-வது வீரராக களமிறங்குகிறார். அவர், ஜஸ்பிரீத் பும்ரா உள்ளிட்ட இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சவால்தரக்கூடும். பிரதான வேகப்பந்து வீச்சாளர்களாக கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங்க் ஆகியோடன் பென் ஸ்டோக்ஸூம் உள்ளார். சுழலில் ஷோயிப் பஷிர் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.
எனினும் கடந்த இரு தசாப்தங்களாக பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்திய ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் போன்று பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான வேகப்பந்துவீச்சு தற்போதைய இங்கிலாந்து அணியில் இல்லை என்றே கருதப்படுகிறது. இதனால் அந்த அணியின் பந்துவீச்சு துறைக்கு அழுத்தம் கொடுக்க இந்திய அணிக்கு இது சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து லெவன்: ஸாக் கிராவ்லி, டென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), கிறிஸ்வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங்க், ஷோயிப் பஷிர்.
இந்திய அணி: ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், ரிஷப் பந்த், கருண் நாயர், அபிமன்யூ ஈஸ்வரன், துருவ் ஜூரெல், நித்திஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்குர், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்துப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா.
ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி: 2007-ம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து விளையாடும் டெஸ்ட் தொடருக்கு பட்டோடி டிராபி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போதைய சுற்றுப்பயணத்தில் இந்த டிராபியை நீக்கிவிட்டு ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியை அறிமுகப்படுத்தியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். கிரிக்கெட்டில் இவர்கள் செய்த சாதனைகளை கவுரவிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டுள்ளது.
எனினும் பட்டோடி பெயர் இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததை தொடர்ந்து ஒவ்வொரு இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் தொடரிலும் வெற்றி பெறும் கேப்டனுக்கு பட்டோடி பதக்கம் வழங்கப்பட உள்ளது. ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் இருவருடைய படங்கள் மற்றும் அவர்களின் கையொப்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளிலும், ஆண்டர்சன் 188 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி உள்ளனர்.
ஸ்விங் பந்துவீச்சில் அபாரமாக செயல்படக்கூடிய ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 704 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதன் மூலம் உலக டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதேவேளையில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முரளிதரன், ஷேன் வார்ன் ஆகியோருக்கு பின்னர் 3-வது இடத்தில் உள்ளார்.
டெண்டுல்கர், 15,921 ரன்களுடன் டெஸ்ட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் தொடர்கிறார். 16 வயதில் அறிமுகமான அவர், 24 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
18 வருட ஏக்கம்.. இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி 3 முறை டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. 1971-ம் ஆண்டு அஜித்வடேகர் தலைமையிலான இந்திய அணியும், 1986-ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியும், 2007-ல் ராகுல் திராவிட் தலைமையிலான இந்திய அணியும் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றிருந்தன. இதன் பின்னர் 18 வருடங்களாக இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது.
2021-2022-ம் ஆண்டு சுற்றுப்பயணத்தில் இந்திய அணி தொடரை வெல்வதற்கு அற்புதமான வாய்ப்பு இருந்தது. 4 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி தொடரில் 2-1 என முன்னிலை வகித்தது. ஆனால் கரோனா பெருந்தொற்று காரணமாக 5-வது நடைபெறவில்லை. இந்த போட்டி 2023-ம் ஆண்டு நடத்தப்பட்ட நிலையில் இந்திய அணி தோல்வி அடைந்தால் தொடர் 2-2 என சமநிலையில் முடிவடைந்தது.
3 டெஸ்டில் மட்டும் பும்ரா: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா 3 ஆட்டங்கள் மட்டுமே விளையாட உள்ளார். பணிச்சுமையை கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர், எடுத்துள்ளார். லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் அவர், களமிறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் மீதமுள்ள 2 போட்டிகள் தொடர்ச்சியாக இருக்குமா? அல்லது இடைவெளி விட்டு களமிறங்குவாரா என்பது தெரியவில்லை.
ஆடுகளம் எப்படி? – லீட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இதுவரை இங்கிலாந்துக்கு எதிராக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 2-ல் இந்திய அணி வெற்றி பெற்றுள்து. ஒரு ஆட்டத்தை டிரா செய்திருந்தது. 4-ல் தோல்வி கண்டிருந்தது. கடைசியாக 2021-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது.
இம்முறை வெப்பநிலை அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஆடுகளத்தில் 8 மில்லி மீட்டர் உயரத்துக்கு புற்கள் உள்ளன. தொடக்க நாளில் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கக்கூடும்.
கடைசி கட்ட பயிற்சியில் தடுமாறிய கருண் நாயர்: இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் 3-வது இடத்தை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. 8 வருடங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ள கருண் நாயர் அந்த இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. ஆனால் முதல் டெஸ்ட் போட்டிக்கான கடைசி பயிற்சி அமர்வில் கருண் நாயர் தடுமாறி உள்ளார்.
ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 33 வயதான கருண் நாயர் நம்பிக்கையுடன் காணப்படவில்லை, அவர்கள் ஆஃப் ஸ்டெம்புகளுக்கு வெளியே பந்துகளை கட்டுக்கோப்புடன், துல்லியமாகவும் வீசி தொந்தரவு செய்தனர். பிரசித் கிருஷ்ணா வீசிய பந்து கருண் நாயரின் விலா எலும்பு பகுதியை தாக்கியது.
எனினும் அவர், பெரிய அளவில் காயம் அடையவில்லை. இறுதியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரிவர்ஸ் ஸ்வீப்ட் உள்ளிட்ட சில அசாதாரண ஷாட்களை விளையாட வேண்டிய நிலைக்கு கருண் நாயர் தள்ளப்பட்டார். ஒன்றிரண்டு முறை ரவீந்திர ஜடேஜாவால் கிளீன் போல்டும் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து பேட்டிங் பயிற்சியாளர் ஷிதான்ஷு கோடக், கருண் நாயரை அழைத்து சில அறிவுரைகளை வழங்கினார். அதன் பிறகு அவர், பேட்டிங்கில் முன்னேற்றம் கண்டதாகவும் அணி வட்டாரங்கள் தெரிவித்தன.
நேரம்: பிற்பகல் 3.30 | நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
நேருக்கு நேர்: ஆட்டங்கள் 136 | வெற்றி: இந்தியா 35, இங்கிலாந்து 51, டிரா 5