லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் 3-வது நாளான நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா, 48-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் மேரி பவுஸ்கோவாவை எதிர்த்து விளையாடினார். இதில் அரினா சபலெங்கா 7-6(7-4), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
6-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில்37-ம் நிலை வீராங்கனையான செர்பியாவின் ஓல்கா டானி லோவிக்கை தோற்கடித்தார்.
22-ம் நிலை வீராங்கனையான குரோஷியாவின் டோனா வெகிக் 1-6, 3-6 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் 102-ம் நிலை வீராங்கனையான கிறிஸ்டினா புக்சாவிடம் தோல்வி அடைந்தார். இதே போன்று 29-ம் நிலை வீராங்கனையான கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் 2-6, 3-6 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் 104-ம் நிலை வீராங்கனையான லாரா சீக்மன்டிடம் வீழ்ந்தார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 12-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோ, 61-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் கேமரூன் நோரியுடன் மோதினார். 2 மணி நேரம் 56 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கேமரூன் நோரி 4-6, 6-4, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் தியாஃபோவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
29-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரண்டன் நகஷிமா 3 மணி நேரம் 34 நிமிடங்கள் போராடி 71-ம் நிலை வீரரான சீனாவின் யுன்சாவோகேடே பூவை 6-4, 4-6, 7-6 (7-1), 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து 3-வது சுற்றில் நுழைந்தார்.