கொழும்பு: இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து வங்கதேச டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ விலகியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் வித்தி யாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி தொடரையும் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ நேற்று அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “வங்கதேச டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது என்னுடைய தனிப்பட்ட முடிவாகும். கிரிக்கெட்டின் 3 விதமான வடிவங்களுக்கு (டெஸ்ட், ஒருநாள், டி20) 3 கேப்டன் என்ற நடைமுறை சரி என்று எனக்குத் தோன்றவில்லை” என்றார். தற்போது வங்கதேச அணியின் ஒருநாள் போட்டி கேப்டனாக மெஹதி ஹசன் மிராஸும், சர்வதேச டி20 அணியின் கேப்டனாக லிட்டன் தாஸும் செயல்பட்டு வருகின்றனர்.