கொழும்பு: வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. மேலும், தொடரை 1-0 என்ற கணக்கில் அந்த அணி கைப்பற்றியது.
இலங்கை – வங்கதேச அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் நடைபெற்று வந்தது. இதில் முதலில் விளையாடிய வங்கதேசம் 79.3 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 458 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இலங்கை முதல் இன்னிங்ஸில் 211 ரன்கள் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து நேற்று 4-ம் நாள் ஆட்டத்தை லிட்டன் தாஸ் 13 ரன்களுடனும், நயீம் ஹசன் ரன் எடுக்காமலும் தொடங்கினர்.
4-ம் நாள் ஆட்டத்திலும் இலங்கை அணி வீரர்கள் சிறப்பாக பந்துவீசி, வங்கதேச வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தனர். இதனால் 44.2 ஓவர்களில் 133 ரன்களுக்கு வங்கதேச அணி 2-வது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. லிட்டன் தாஸ் 14, நயீம் ஹசன் 5, தைஜுல் இஸ்லாம் 6, எபடோட் ஹொசைன் 6 ரன்கள் சேர்த்து வீழ்ந்தனர்.
இதையடுத்து இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், 2 போட்டிகள் டெஸ்ட் தொடரையும் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
2-வது இன்னிங்ஸில் இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்களையும், தனஞ்செய டி சில்வா, தரிந்து ரத்னாயகே ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், அசிதா பெர்னாண்டோ ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். போட்டி நாயகனாகவும், தொடர்நாயகனாகவும் பதும் நிசங்கா தேர்வு செய்யப்பட்டார்.
ஒருநாள் தொடர்: டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் விளையாடவுள்ளன. முதல் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் வரும் ஜூலை 2-ம் தேதி நடைபெறவுள்ளது. அதன்பிறகு இந்த 2 அணிகள் மோதும் சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் ஜூலை 10-ம் தேதி தொடங்கவுள்ளது.