லார்ட்ஸ்: நாளை (ஜூன் 11) லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டி மழையால் கைவிடப்பட்டால் வெற்றியாளர் யார் என்பதை பார்ப்போம்.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனை படைக்கும். தென் ஆப்பிரிக்க அணி வென்றால் 30 ஆண்டுகளாக ஐசிசி தொடரில் பட்டம் வெல்ல முடியாத வரலாற்றை மாற்றி எழுதும்.
லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்கும் இந்த ஆட்டம் வரும் 15-ம் தேதி வரை நடைபெறும். ஜூன் 16 ‘ரிசர்வ் டே’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு அணிகளும் தங்களது கள செயல்பாடுகள் மூலம் இறுதிக்கு முன்னேறி உள்ளனர்.
மழை வருமா? – போட்டி நடைபெறும் நாட்களில் லார்ட்ஸ் மைதானத்தை ஒட்டிய பகுதி மேகமூட்டத்துடன் இருக்கும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது மழை பொழிவு இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அன்றைய தினம் மழை பொழிவுக்கான வாய்ப்பு 25 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக அன்றைய தினம் ஆட்டம் நடைபெறவில்லை என்றால் ‘ரிசர்வ் டே’ அன்று போட்டி நடைபெறும்.
இந்த போட்டியில் வெற்றியாளரை தீர்மானிக்கவே ரிசர்வ் டே நடைமுறையில் உள்ளது. இந்த போட்டி டிராவில் முடிந்தாலோ அல்லது மழை காரணமாக கைவிடப்பட்டாலோ இரு அணிகளுக்கும் சாம்பியன்ஷிப் பட்டம் பகிர்ந்து வழங்கப்படும். இதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா பட்டம் வென்றுள்ளது. அந்த இரண்டு முறையும் இந்திய அணி ஃபைனலில் விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.